வந்தார் அன்னா ஹசாரே.. நிலம் ஆர்ஜித சட்டத்தை எதிர்த்து காலவரையற்ற உண்ணாவிரதம்
டெல்லி: நில கையக சட்டத்தை எதிர்த்து காலவரையற்ற உண்ணா விரதம் இருக்க போவதாக அறிவித்துள்ளார் சமூக போராட்டக்காரரான அன்னா ஹசாரே.
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பல்வேறு சமூக பிரச்சினைகளுக்காக உண்ணா விரதம் இருந்து நாடு முழுவதும் கவனம் ஈர்த்தவர் அன்னா ஹசாரே. இவருடன் போராட்டத்தில் பங்கெடுத்த அரவிந்த் கேஜ்ரிவால் போன்ற போராட்டக்காரர்கள் ஆம்ஆத்மி கட்சியுடன் ஐக்கியமாகிவிட்ட நிலையில், மீண்டும் போராட்ட அறிவிப்பை வெளியிட்டு்ள்ளார் ஹசாரே. இம்முறை, பாஜக அரசுக்கு எதிராக இரு முக்கிய ஆயுதங்களை அவர் கையிலெடுத்துள்ளார்.
நில ஆர்ஜித சட்டம் மற்றும் ராணுவ வீரர்களுக்கான ஒரு ரேங்க், ஒரு பென்ஷன் திட்டம் ஆகிய இரு பிரச்சினைகளே ஹசாரே முடிவுக்கு காரணம். விவசாயிகளிடமிருந்து வலுக்கட்டாயமாக நிலத்தை அரசுகள் பிடுங்க நில ஆர்ஜித சட்டம் வழி செய்துவிடும் என்பது அன்னா ஹசாரே வாதம். அதேபோல, ராணுவத்தில் எந்த வருடம் ரிட்டையர்ட் ஆனவராக இருந்தாலும், அவர்கள் பதவிகளை வைத்துதான் பென்சன் தர வேண்டும். வருட கணக்கை வைத்து பென்சன் தொகை மாறக்கூடாது என்பதும் ஹசாரே கோரிக்கை.
அக்டபோர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி தினம் முதல், இவ்விரு கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லி ராம்லீலா மைதானத்தில் ஹசாரே, காலவரையற்ற உண்ணா விரத போராட்டத்தை தொடங்க உள்ளார்.