"குரங்குகளுக்கு உணவூட்டும் சான்டா"... மோடி கேபினட் படத்துக்கு குசும்பு கேப்ஷன் கொடுத்த டிடி!
டெல்லி : மீண்டும் இமாலயத் தவறு செய்து சர்ச்சையில் சிக்கியுள்ளது தூர்தர்ஷன். இம்முறை கிறிஸ்துமஸை முன்னிட்டு குரங்குகளுக்கு உணவூட்டும் சாண்டா என்ற பதிவின் கீழே மோடியின் கேபினட் மீட்டின் புகைப்படத்தைப் பதிவு செய்து பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
இந்தாண்டு தூர்தர்ஷனுக்கு நல்ல ஆண்டாக அமையவில்லை என்றே கூறலாம். அந்தளவுக்கு அதுவும், அதன் ஊழியர்களும் சர்ச்சையில் சிக்கி சின்னாபின்னம் ஆனார்கள்.
கடந்த செப்டம்பர் மாதம் இரவு நேர செய்தி ஒன்றில் வாசிப்பாளர் இந்தியா வந்திருந்த சீன அதிபர் சீ ஜின்பிங்கின் பெயரை பதினோராவது ஜின்பிங் என வாசித்து சர்ச்சையில் சிக்கினார். பின்னர் நடந்த செயலுக்கு வருத்தம் தெரிவித்த தூர்தர்ஷன், அப்பணியாளரை பணியில் இருந்து நீக்கியது. இந்த சர்ச்சை ஓய்வதற்கு முன்னதாகவே, கோவா கவர்னர் மிருதுளா சின்ஹாவை இந்திய கவர்னர் என அறிமுகப்படுத்தி மீண்டும் பரபரப்பை உண்டாக்கினார் மற்றொரு நிகழ்ச்சித் தொகுப்பாளர்.
இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு தவறான செய்தி மூலம் சர்ச்சையில் சிக்கியுள்ளது தூர்தர்ஷன். அதாவது தூர்தர்ஷனின் டுவிட்டர் பக்கத்தில் சீனாவில் ஜூ ஒன்றில் கிறிஸ்துமஸ் தாத்தா உடையணிந்த ஒருவர் குரங்குகளுக்கு உணவளிப்பது குறித்த செய்தி ஒன்று பதிவேற்றம் செய்யப்பட்டது.
ஆனால், அந்தச் செய்திக்குக் கீழே தவறுதலாக மோடியின் கேபினட் புகைப்படம் இடம் பிடித்து விட்டது. அதில் பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ் போன்றோர் அமர்ந்துள்ளனர்.
தூர்தஷனின் இந்தப் பதிவைப் பார்த்த மக்கள் அதிர்ச்சிக்கு ஆளானார்கள். அவர்கள் இது தொடர்பாக வெளியிட்ட கருத்துக்களைக் கண்டே தனது தவறை உணர்ந்தது தூர்தர்ஷன். உடனடியாக அந்த புகைப்படத்தை நீக்கிய தூர்தர்ஷன், நடந்த தவறுக்கு தொழில்நுட்ப கோளாறே காரணம் விளக்கமளித்துள்ளது.