நாய்களால் கடித்துக் குதறப்பட்ட மான்... ஹைதராபாத் பல்கலையில் தொடரும் சோகம்
ஹைதராபாத்: ஹைதராபாத் பல்கலைக்கழக வளாகத்தில் நாய்களால் கடித்துக் கொல்லப்பட்ட மானின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத் பல்கலைக்கழக வளாகத்தில் மான்கள் சடலங்களாக கண்டெடுக்கப்படுவது அதிகரித்து வருகிறது. கடந்த மாதமும் இங்கு இரண்டு மான்களின் உடல்கள் மீட்கப்பட்டன. இதேபோல், கச்சிபவ்லி போலீசார் 20கிலோ மான் கறியை பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், ஹைதராபாத் பல்கலைக்கழக வளாகத்தில் ஆண்கள் விடுதியின் பின்புறம் கடந்த செவ்வாயன்று மாலை மான் ஒன்று இறந்து கிடந்தது. சுமார் 3 வயது மதிக்கத்தக்க அந்த மான், நாய்கள் கடித்துக் கொல்லப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆண்கள் விடுதியின் பின்புறம் தண்ணீர் குடிப்பதற்காக வந்த போது அந்த மான் நாய்களால் கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.
இது தொடர்பாக பல்கலைக்கழக தலைமை பாதுகாப்பு அதிகாரி ராவ் கூறுகையில், ‘பல்கலைக்கழக வளாகத்தில் நாய்களின் தொல்லை அதிகமாக காணப்படுகிறது. இதனால் வனவிலங்குகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.