அப்சல் குரு உடலை ஒப்படையுங்கள்... புதுப் பிரச்சினையைக் கிளப்பும் முப்தி கட்சி எம்.எல்.ஏக்கள்!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புதிய அரசு அமைந்தத அடுத்த நாளே சர்ச்சைகள் கிளம்பி விட்டன. முதலில் முதல்வர் முப்தி முகம்மது சயீத் பேசிய சில கருத்துக்கள் சர்ச்சையை கிளப்பி நாடாளுமன்றத்தில் புயலையும் கிளப்பி விட்டது. இந்த நிலையில் தற்போது முப்தி கட்சியின் எம்.எல்.ஏக்கள் புதுப் பிரச்சினையை எழுப்பியுள்ளனர்.
முப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த சில எம்.எல்.ஏக்கள், அப்சல் குருவின் உடலை அரசு ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். டெல்லியில் நாடாளுமன்றத்தின் மீது நடந்த தீவிரவாதத் தாக்குதல் வழக்கில் கைதான அப்சல் குருவுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு அது 2013ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது என்பது நினைவிருக்கலாம்.
அவரது உடலை திஹார் சிறை வளாகத்துக்குள்ளேயே அதிகாரிகள் அடக்கம் செய்து விட்டனர். இந்த நிலையில் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர் ஜம்மு காஷ்மீரி்ல் பாஜகவுடன் இணைந்து புதிதாக ஆட்சியைமைத்துள்ள மக்கள் ஜனநாயகக் கட்சியினர்.
அப்சல் குருவின் உடலை அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மக்கள் ஜனநாயகக் கட்சி எம்.எல்.ஏக்கள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து அக்கட்சி எம்.எல்.ஏக்கள் சிலர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில், அப்சல் குருவுக்கு நிறைவேற்றப்பட்ட தண்டனை அநீதியானது. அவரது உடலை குடும்பத்தாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோருகிறோம் என்று கூறியுள்ளனர்.
ஏற்கனவே அப்சல் குரு விவகாரம் தொடர்பாக சர்ச்சையைக் கிளப்பியவர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த அவாமி இத்திகாட் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. என்ஜீனியர் ரஷீத். தற்போது ஜம்மு காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் பாஜக வைத்துள்ள கூட்டணியை அவர் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், பாஜகவுக்கு கொஞ்சமாவது தார்மீக மதிப்பு இருந்தால் தற்போது ஏற்படுத்தியுள்ள புதிய கூட்டணியை விட்டு அது விலக வேண்டும். காரணம் அது அப்சல் குருவை தீவரவாதி என்று வர்ணித்த கட்சியாகும். ஆனால் நான் அப்சல் குரு ஹீரோ என்று நிரூபித்தவன்.
மக்கள் ஜனநாயகக் கட்சி ஆரம்பத்திலிருந்தே அப்சல் குரு விவகாரத்தை தவறாகவே கையாண்டது. இப்போதாவது அது சரியாக நடக்க முன்வர வேண்டும் என்றார்.
அப்சல் குரு, கடந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது தூக்கிலிடப்பட்டார். அவரது உடலை குடும்பத்தாரிடம் ஒப்படைக்க மறுத்த அரசு திஹார் சிறைக்குள்ளேயே உடலை அடக்கம் செய்து விட்டது என்பது நினைவிருக்கலாம்.
தற்போது பாஜகவுடன், மக்கள் ஜனநாயகக் கூட்டணி அரசு அமைத்துள்ள நிலையில் அடுத்தடுத்து பா்ஜக அரசுக்கு சவால் விடும் வகையில் சர்ச்சைகள் கிளம்பியிருப்பது டெல்லி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.