பெங்களூரை் தொடர்ந்து... கர்நாடகாவின் தும்கூரில் பரபரப்பு... பட்டப்பகலில் வீட்டில் புகுந்த சிறுத்தை!
தும்கூர்: கர்நாடகாவில் மீண்டும் ஒரு சிறுத்தை பட்டப் பகலிலேயே பங்களா வீடு ஒன்றில் புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பினையும், பீதியினையும் ஏற்படுத்தியுள்ளது.
தும்கூர் தாலுகா அனுமந்தபுராவில் உள்ள ஆஞ்சநேயர் சுவாமி கோவில் பின்பகுதியில் வசிக்கும் கங்கண்ணா என்பவரின் வீட்டில் நேற்று காலை சிறுத்தை ஒன்று நுழைந்தது.
ஆனால், கங்கண்ணா மற்றும் உறவினர்கள் அனைவரும் வயல்வெளிக்கு சென்றிருந்ததால் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சிறுத்தை வீட்டுக்குள் நுழைந்ததை அறிந்த கிராம மக்கள் நூற்றுக்கணக்கில் திரண்டனர்.
இதனால், வீட்டுக்குள் நுழைந்த சிறுத்தை பீதி அடைந்து அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தது. தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள், போலீசார் கூடியிருந்த பொதுமக்களை விரட்டினர். வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதுடன் சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
பின்னர், வனத்துறையினர் மயக்க மருந்து அடங்கிய ஊசியால் சுட்டு சிறுத்தையை மயக்கமடையச் செய்து பிடித்து சென்றனர். மக்கள் வசிக்கும் பகுதி என்பதாலும், அந்த வீட்டின் புல்வெளிப் பகுதியிலேயே சிறுத்தை சுற்றியதாலும் அதைப் பிடிப்பது மிகவும் கடினமாக இருந்ததாகவும் காவலர்கள் தெரிவித்தனர்.