காஷ்மீரில் பாதுகாப்பு படையினரிடம் உயிரோடு சிக்கிய பாக். தீவிரவாதி! ஒரே மாதத்தில் 2வது சம்பவம்
ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம் ரபியாபாத் பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதி ஒருவன் உயிரோடு பிடிபட்டுள்ளான். சில தினங்களுக்கு முன்பு நவீத் என்ற தீவிரவாதி உயிரோடு சிக்கிய நிலையில் தற்போது மற்றொருவன் கைது செய்யப்பட்டுள்ளது இரு நாட்டு எல்லையில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
இம்மாதத்தின் தொடக்கத்தில், பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள் சிலர் காஷ்மீருக்குள் ஊடுருவினர். அவர்களில், நவீத் என்பவன் உயிரோடு பிடிபட்டான். மற்றவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், மாநிலத்தின் ரபியாபாத் மாவட்டத்தில் இன்று ஒரு தீவிரவாதியை பாதுகாப்பு படையினர் உயிரோடு பிடித்துள்ளனர். பாதுகாப்பு படையினரை நோக்கி சுட்ட மேலும் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஒரு மாதத்திற்குள் இந்திய எல்லைக்குள் உயிரோடு பிடிபட்ட 2வது பாகிஸ்தான் தீவிரவாதி இவன். முதல்கட்ட விசாரணையில் தீவிரவாதியின் பெயர், சஜ்ஜாத் அகமது என்றும், இவன், பாகிஸ்தானிலுள்ள பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்தவன் என்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.