எந்த ஒரு சமூகத்தின் மீதும் வன்முறையை கட்டவிழ்த்து விடுவதை சகிக்க முடியாது: பிரதமர் மோடி
டெல்லி: நாட்டின் அனைத்து சமூகத்தினருக்கும் சம உரிமை உண்டு; எந்த ஒரு சமூகத்தின் மீதும் வன்முறை கட்டவிழ்த்துவிடப்படுவதை சகித்துக் கொள்ள முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி பதிலளித்துள்ளார்.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு அமைந்து ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இந்த ஓராண்டு ஆட்சி குறித்து ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு பிரதமர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
கடந்த ஓராண்டு ஆட்சிக் காலத்தில் எனது அரசு எண்ணற்ற சாதனைகள நிகழ்த்தியுள்ளது. கருப்புப் பணத்தை வெளிநாட்டில் இருந்து கொண்டுவருவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.
ஜி 20 மாநாட்டின் போதுகூட உலக நாடுகளின் தலைவர்களிடம் கருப்பு பண விவகாரம் குறித்து பேசினேன். எங்களது முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில்தான் கருப்புப் பணம் குறித்த சிறப்பு புலனாய்வுக் குழுவும் அமைக்கப்பட்டது. நில ஆர்ஜித மசோதா என்பது விவசாயிகளுக்கு பயனளிக்கக் கூடியது.
காங்கிரஸ் கட்சி இந்த நாட்டை 60 ஆண்டுகாலம் ஆண்டது. இந்த 60 ஆண்டுகாலத்துக்குப் பின்னர் தற்போதுதான் திடீரென ஏழைகள் மீது காங்கிரஸுக்கு கரிசனம் ஏற்பட்டுள்ளது. எங்களை சூட்-பூட் அரசாங்கம் என விமர்சிக்கிறது காங்கிரஸ்.. அவர்களது "சூட்கேஸ்' கலாசாரத்தைவிட இந்த 'சூட்-பூட்' கலாசாரம் ஏற்புடையதுதான். காங்கிரஸின் கொள்கைகளால் இந்த நாட்டு மக்கள் பெரும் துயரத்துக்குள்ளாகினார்கள். காங்கிரஸ் ஆட்சிக் காலத்து ஸ்பெக்ட்ரம், நிலக்கரி மற்றும் காமன்வெல்த் ஊழல்கள் ஏழைகளுக்காக செய்யப்பட்டவையா என்ன?
நம்முடைய அரசியலமைப்பு சட்டம் ஒவ்வொரு குடிமகனுக்கும் மதசுதந்திரத்தை அனுமதித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்துவரை அனைத்து பாரம்பரிய நம்பிக்கைகளையும் வரவேற்கிறோம். இதைத்தான் சுவாமி விவேகானந்தரும் வலியுறுத்தினார். இந்தியாவில் ஆயிரமாயிரமாண்டுகளாக இந்த கோட்பாடுதான் வலியுறுத்தப்பட்டும் வருகிறது.
இந்தியாவில் எந்த ஒரு சமூகத்துக்கும் எதிராகவும் வன்முறையை கட்டவிழ்த்துவிடுவதை சகித்துக் கொள்ள முடியாது. மத்திய அரசு என்பது ஒட்டுமொத்தமாக அனைத்து இந்தியர்களுக்குமானது. அனைவரது முன்னேற்றத்துக்குமானது. அனைவரும் சம உரிமை படைத்தவர்கள்.. சட்டத்தின் முன் மட்டுமல்ல சமூகத்திலும் அனைவரும் சமமானவர்களே..