20 தமிழர் படுகொலை: ஆந்திரா போலீசுக்கு ஹைதராபாத் ஹைகோர்ட் 'நெத்தியடி'- விசாரணை அறிக்கை நிராகரிப்பு!!
ஹைதராபாத்: 20 தமிழர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் ஆந்திரா போலீசார் தாக்கல் செய்த விசாரணை அறிக்கையை ஹைதராபாத் உயர்நீதிமன்றம் இன்று அதிரடியாக நிராகரித்தது. இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி வரும் நாளை மறுநாள் புதிய அறிக்கையைத் தாக்கல் செய்யவும் ஹைதராபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பதி அருகே 20 தமிழர்கள் செம்மரம் வெட்டியதாக கூறி போலி என்கவுண்ட்டரில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கு ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் முதல் கட்டத்திலேயே போலி என்கவுண்ட்டரில் தொடர்புடைய போலீசார் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய ஹைதராபாத் உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. அதன் பின்னர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட 6 பேரின் உடல்கள் மறுபிரேத பரிசோதனைக்கும் உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை அறிக்கை ஒன்றை ஆந்திரா போலீசார் தாக்கல் செய்தனர். ஆனால் இந்த விசாரணை அறிக்கையை ஹைதராபாத் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
எந்த ஒரு விவரமுமே இல்லாத விசாரணை அறிக்கையை எப்படி ஏற்பது? போலீசார் மீது வழக்குப் பதிவு செய்த பின்னரும் விசாரணை நடத்தாது ஏன் என்றும் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
அத்துடன் வரும் 30-ந் தேதிக்குள் விரிவான விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும்.. இந்த வழக்கின் விசாரணைக்கு உதவும் வகையில் சிறப்பு வழக்கறிஞரை நியமிக்கவும் தயாராக உள்ளோம் என்றும் ஹைதரபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.