ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தை எதிர்கொள்வதில் தடுமாறும் இந்தியா!
டெல்லி: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எதையும் இந்தியா தொடங்காமல் இருப்பதால் இந்தியாவில் அதன் ஊடுருவலை எப்படி அரசு எதிர்கொள்ள போகிறது என்பது புரியாத புதிராகவே உள்ளது.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால், ஈராக்கில் நாற்பது இந்தியர்கள் கடத்தி செல்லப்பட்டு ஆறு மாதங்கள் ஆகியுள்ளன. அதில் ஒருவர் தப்பித்து ஓடி வந்ததால் உயிர் தப்பியுள்ளார். ஆனால் எஞ்சிய 39 பேரையும் பற்றிய தகவல் இந்திய அரசுக்கு கிடைக்கவில்லை.
குழப்பம் ஏற்படுத்தும் தீவிரவாதிகள்
தீவிரவாதிகள் ஒரே இடத்தில் பிணைய கைதிகளை வைத்திராமல், அவர்களை அங்குமிங்கும் அலைக்கழிப்பதால் தகவல் தொடர்பு துண்டிக்கப்படுவதோடு, இருப்பிடடத்தை கண்டுபிடிக்கவும் அதிகாரிகள் சிரமப்படுகின்றனர்.
மீட்பது சிரமம்
வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகளும் இதை ஒப்புக்கொள்கின்றனர். 39 இந்தியர்களை மீட்கும் பணி சிரமம் மிகுந்தது என்று அவர்கள் கூறுகின்றனர்.
கொன்றிருக்கலாம்
இதனிடையே வங்கதேசத்தை சேர்ந்த ஷாபி மற்றும் ஹாசன் ஆகிய இருவரிடமும் ஒரு தொலைக்காட்சி எடுத்த பேட்டியில் தாங்கள் எர்பில் நகரில் இருந்தபோது ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளிடமிருந்து தப்பியோடி வந்த ஹர்ஜீத் என்பவரை சந்தித்ததாகவும், 39 இந்தியர்களை தீவிரவாதிகள் கொன்றிருக்கலாம் என்று அவர் கூறியதாகவும் பேட்டியளித்துள்ளனர். இது குழப்பத்தை மேலும் அதிகரித்துள்ளது.
இந்தியா மறுப்பு
ஆனால் வெளியுறவுத்துறை அமைச்சகமோ இந்த தகவலை உறுதி செய்ய மறுக்கிறது. ஏனெனில், பிணைய கைதிகள்தான் தீவிரவாதிகளுக்கு டிரம்ப் கார்டு போல. எனவே அவர்களை கொல்வதற்கு சாத்தியமில்லை. அவர்களை காண்பித்துதான் தங்களை காப்பாற்றும் நிலையில் தீவிரவாதிகள் உள்ளனர் என்கின்ரனர்.
தடையில்லை
இதனிடையே ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இருந்து இந்தியாவுக்கு திரும்பி வந்த இளைஞர்களை போலீசார் கைது செய்யவில்லை. அவர்கள் மீது வழக்கு கூட தொடரவில்லை. இதற்கு காரணம் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு இந்தியாவில் தடை விதிக்காததுதான் என்று கூறப்படுகிறது.
ஏன் குழப்பம்
இல்லை என்று நம்பும் விடுதலை புலிகள் இயக்கத்திற்கு இந்தியாவில் தடை உள்ள நிலையில், உக்கிரமான தாக்குதல்களை வளைகுடாவில் அரங்கேற்றிவரும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு இந்தியாவில் இதுவரை தடை விதிக்கப்படாதது இந்தியாவின் கொள்கை முரணை காண்பிக்கிறது.
கண்காணிப்பில் மாஜி தீவிரவாதிகள்
அதேவேளையில், தீவிரவாத இயக்கத்தில் இருந்து இந்தியாவுக்கு திரும்பி வந்தவர்களுக்கு கவுன்சலிங் கொடுத்து தேசப்பற்று குறித்து எடுத்துச் சொல்லப்பட்டு வருகிறது. உளவுத்துறையும், அவர்களின் நடவடிக்கைகளை கண்காணித்து வருகிறது. இந்தியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு வேரூன்ற திட்டமிட்டுள்ளதால், இவர்கள் பிற இளைஞர்களை மூளை சலவை செய்து தீவிரவாதிகளாக்கும் நோக்கில் இந்தியா திரும்பியிருக்க கூடும் என்ற சந்தேகம் உளவுத்துறைக்கு உள்ளது.