நீ பைத்தியமா.. குடிச்சிருக்கியா- மின்வெட்டு பற்றி கேள்வி கேட்டவரை திட்டித் தீர்த்த சந்திரபாபு நாயுடு
நந்தியால் தொகுதியில் மின்வெட்டு அடிக்கடி ஏற்படுவது குறித்து தொகுதிவாசி ஒருவர் கேட்ட கேள்வி, நீ என்ன பைத்தியமா என்று ஆந்திர மாநில முதல்வர் சந்திர பாபு நாயுடு திட்டித் தீர்த்துள்ளார்.
ஹைதராபாத்: ஒரு குடிமகனாக மின் வெட்டு குறித்து கேள்வி கேட்டவரை பொது இடத்தில் நீ என்ன பைத்தியமா என்று கேட்டு ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு திட்டினார். இது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள நந்தியால் தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த புமா நாகி ரெட்டி கடந்த மார்ச் மாதம் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதனையடுத்து அங்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இந்தத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு மேற்கொண்டு வருகிறார். நேற்றும் ஆந்திர மாநில முதல்வர் சந்திர பாபு நாயுடு அந்தத் தொகுதிக்குச் சென்று பிரச்சாரம் செய்தார். அப்போது அந்தத் தொகுதியைச் சேர்ந்த ஒருவர் மின் வெட்டு அடிக்கடி ஏற்படுவது குறித்து கேள்வி எழுப்பினார்.
இதனால் கடுப்பான சந்திரபாபு நாயுடு, இப்படி கேள்வி கேட்க உனக்கு எவ்வளவு தைரியம்? கட்சித் தொண்டர்கள் இவ்வளவு பேர் கூடி இருக்க இப்படித்தான் பேசுவதா? நான் ஒரு முதல்வராக இங்கு வந்திருக்கிறேன் என்று சகட்டுமேனிக்கு திட்டித் தீர்த்திருக்கிறார் சந்திரபாபு நாயுடு.
இதுமட்டும் இல்லாமல், பைத்தியமா நீ? குடிச்சிருக்கியா? ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அனுப்பிய ஆளாக இருந்தால் என் கூட்டத்திற்கு வராதே என்றெல்லாம் கண்ணாபின்னா என்று பேசியதைப் பார்த்து அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ந்திவிட்டார்களாம்.
கடந்த மாதம் இதே தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடபட்ட போது, நான் கொடுக்கிற பென்ஷன், நான் அமைத்த சாலை, ரேஷன் என அனைத்தையும் பயன்படுத்திக் கொண்டு ஏன் எனக்கு ஆதரவு அளிக்க மாட்டேன் என்கின்றீர்கள் என்ற ரீதியில் மக்களிடம் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார் சந்திரபாபு நாயுடு என்பது குறிப்பிடத்தக்கது.