இந்திய ராணுவம் பெண்களை கடத்தும், பலாத்காரம் செய்யும்.. கேரள மா.கம்யூ தலைவர் பேச்சால் சர்ச்சை
திருவனந்தபுரம்: ராணுவத்திற்கு அதிக அதிகாரம் கொடுத்தால் பெண்களை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்வார்கள் என்று கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கொடியேரி பாலகிருஷ்ணன் பேசிய பேச்சு மலையாள டிவி சேனல்களில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. அவர் கூறுகையில், ராணுவத்திற்கு கூடுதல் பலத்தை வழங்கினால் யார் மீது வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் ராணுவ வீரர்கள் செய்வார்கள். பெண்களை கடத்துவது, பலாத்காரம் செய்வது ஆகியவற்றையும் செய்வார்கள்.
கன்னூருக்கு ராணுவத்தை அழைத்து வந்தால், மக்களுக்கும் ராணுவத்திற்கும் மோதல்தான் ஏற்படும். நான்கு பேருக்கு மேல் ஒன்றாக நின்றுகொண்டிருப்பதை பார்த்தாலே போதும், ராணுவம் சுட்டுக்கொன்றுவிடவும் வாய்ப்புள்ளது. அவர்களை கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை என்று கூறியுள்ளார்.
போர் போன்ற சூழல் உருவாகும்போது ராணுவம் உடனடியாக நடவடிக்கை எடுக்க அரசு சுதந்திரம் கொடுத்துள்ளது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண் ஜேட்லி நேற்று கூறியிருந்த நிலையில் கொடியேரி பாலகிருஷ்ணன் இவ்வாறு பேசியதாக தெரிகிறது.
அதேநேரம், ராணுவத்தை இழிவுபடுத்திவிட்டதாக கூறி சமூக வலைத்தளங்களில் கொடியேரி பாலகிருஷ்ணனுக்கு எதிராக கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. கேரளாவில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் இடதுசாரிகள் நடுவே மோதல் நிலவி வருகிறது. இரு தரப்பிலும் கொலைகள் அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில் கேரளாவுக்கு ராணுவத்தை அனுப்பி நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என பாஜக ஆதரவாளர்கள் கருத்து கூறிவரும் நிலையில் கொடிகேரி பாலகிருஷ்ணன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.