ஊடுருவலை தடுக்க எல்லை பகுதியில் ரிமோட் கன்ட்ரோல் துப்பாக்கிகள்: ராணுவம் திட்டம்
டெல்லி: எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில் ரிமோட் மூலம் இயங்கும் எந்திர துப்பாக்கிகளை பயன்படுத்த இந்திய ராணுவம் முடிவு செய்துள்ளது.
ஜம்மு காஷ்மீருக்குள் தீவிரவாதிகள் ஊடுருவுவதை தடுக்க ரிமோட் கன்ட்ரோல் மெஷின் கன்கள் அதாவது ரிமோட் மூலம் இயங்கும் எந்திர துப்பாக்கிகளை இந்திய ராணுவத்தினர் பயன்படுத்த உள்ளனர். ஜம்மு ஹில்ஸ் பகுதியை காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து பிரிக்கும் பிர் பஞ்சால் தொடர் பகுதியில் இந்த ரிமோட் கன்ட்ரோல் எந்திர துப்பாக்கிகளை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக அக்னூர் செக்டரில் ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயங்கும் மாதிரி சப்-மெஷின் கன்கள் சோதனை அடிப்படையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சோதனையில் இந்த வகை துப்பாக்கிகள் ராணுவ வீரர்களுக்கு பேருதவியாக இருக்கும் என்பது தெரிய வந்துள்ளது.
எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே இன்ப்ரா ரெட் சென்சார்கள் அடங்கிய எந்திர துப்பாக்கியை வைத்துவிடுவார்கள். அந்த பகுதியில் 80 மீட்டர் தூரம் வரை ஏதாவது நடமாட்டம் தெரிந்தால் சென்சார்கள் அதை பங்கரில் மேப்பிங் சாப்ட்வேரை கண்காணிக்கும் வீரர்களுக்கு தெரிவிக்கும்.
அவர்கள் நடமாட்டத்தால் அசுறுத்தல் ஏற்படும் என்று நினைத்தால் ரிமோட் பட்டனை அழுத்தினால் போதும் துப்பாக்கி சுட்டுவிடும். தற்போது இலகு ரக எந்திர துப்பாக்கிகளை சோதனை அடிப்படையில் பயன்படுத்தி வருகிறார்கள்.
ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயங்கும் எந்திர துப்பாக்கிகளை இன்னும் இரண்டு மாதங்களில் ஊடுருவல் அதிகம் உள்ள இடங்களில் வைக்க உள்ளனர்.