காஷ்மீரில் 2 இளைஞர்கள் சுட்டுக் கொலை, 9 ராணுவ வீரர்களே குற்றவாளிகள்!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பட்காமில் 2 இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் 9 ராணுவ வீரர்கள்தான் குற்றம் செய்தவர்கள் என்று ராணுவம் தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் அருகே உள்ள நவ்கம் பகுதியில் இருந்து புல்வாமா மாவட்டத்திற்கு ஒரு காரில் தீவிரவாதிகள் செல்வதாக ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இடையில் உள்ள பட்காம் மாவட்டத்தில் ராணுவத்தினர் 3 சோதனைச்சாவடிகள் அமைத்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக இளைஞர்கள் சிலர் சென்று கொண்டிருந்த மாருதி கார், ராணுவத்தினர் அமைத்திருந்த 2 சோதனை சாவடிகளில் நிற்காமல் சென்றது. இதையடுத்து சட்டர்காம் பகுதியில் உள்ள 3-வது சோதனைச்சாவடியில் காரை ராணுவத்தினர் மடக்கி பிடிக்க முயன்றனர்.
அப்போது அந்த கார் தடுப்புகளை உடைத்துக்கொண்டு தப்பிச்செல்ல முயன்றது. இதனால் ராணுவ வீரர்கள் அந்த காரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில், காரில் இருந்த 2 இளைஞர்கள் துப்பாக்கி குண்டு பாய்ந்து பலியாகினர். மேலும் 2 காயம் அடைந்தனர்.
இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்த ராணுவம் இதுகுறித்து விசாரணைக்கும் உத்தரவிட்டது. விசாரணை முடிவடைந்தது அதிகாரிகளிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் இரு இளைஞர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 9 ராணுவ வீரர்களின் குற்றம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாருதி கார் மீது துப்பாக்கி சூடு நடத்தியபோது ராணுவ வீரர்கள் தவறு செய்துவிட்டனர். ராணுவ வீரர்கள் காரில் தீவிரவாதிகள் பயணம் செய்கின்றனர் என்று தவறுதலாகக் கருதி துப்பாக்கிச் சூடு நடத்தியனர் என்று ராணுவம் தெரிவித்துள்ளது.