காஷ்மீரில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பலாத்காரம் செய்த ராணுவ வீரர்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ராணுவ வீரரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள மென்தார் தெஹ்சிலைச் சேர்ந்தவர் ஹக் நவாஸ். ராணுவ வீரர். காஷ்மீரில் உள்ள என்ஜினியர்கள் ரெஜிமென்ட்டில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் விடுப்பில் அவர் வீட்டிற்கு சென்றுள்ளார். செவ்வாய்க்கிழமை இரவு அவர் மென்தார் தெஹ்சிலில் உள்ள மான்கோட் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
தான் வீடு புகுந்து பலாத்காரம் செய்ததை யாரிடமாவது தெரிவித்தால் அவ்வளவு தான் என்று அவர் அந்த பெண்ணை மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். அவரின் மிரட்டலையும் மீறி அந்த பெண் ஹக் மீது போலீசில் புகார் அளித்தார்.
அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஹக்கை கைது செய்ய சென்றனர். ஆனால் அதற்குள் அவர் தலைமறைவாகிவிட்டார். போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.