அப்துல் கலாம் உடனான கனவு சந்திப்புக்காக காத்திருக்கும் ராணுவ வீரர்
பெங்களூர்: இந்திய ராணுவத்தில் சிப்பாயாக இருக்கும் 30 வயது சி. ரஞ்சித்தின் கனவு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை சந்திக்கும்போது நனவாகும்.
கேரளாவைச் சேர்ந்த விவசாயியின் மகனான ரஞ்சித் ஒரு ஓவியர். அவர் கடந்த 12 ஆண்டுகளாக ராணுவத்தில் உள்ளார். விலங்கு பிரியரான அவருக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை சந்திக்க வேண்டும் என்ற கனவு உள்ளது. இந்நிலையில் அவர் இன்று பெங்களூரில் ராஜ் பவனில் வைத்து அப்துல் கலாமை சந்திக்க உள்ளார்.
ரஞ்சித் வரைந்த ஓவியங்களை வைத்து பெங்களூரில் கடந்த 10ம் தேதி ஓவியக் கண்காட்சி துவங்கப்பட்டது. விழிதுத்துக்கொள் என்ற தலைப்பிலான அந்த கண்காட்சி 5 நாட்களுக்கு நடக்கிறது. விலங்குகளில் அதிலும் குறிப்பாக பசு வதையை ஏற்காதீர்கள் என்பது தான் கண்காட்சி நடத்தப்படுவதின் முக்கிய நோக்கம் ஆகும். கண்காட்சியில் விலங்குகளை கொல்வதற்கு எதிரான ஓவியங்கள் தவிர்த்து ரஞ்சித் வரைந்த பிற ஓவியங்களும் வைக்கப்பட்டுள்ளன. மேலும் ரஞ்சித் அப்துல் கலாமை ஓவியமாக வரைந்துள்ளதையும் கண்காட்சியில் வைத்துள்ளார். கலாமின் ஓவியம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கண்காட்சியில் விற்கப்படும் ஓவியங்களில் இருந்து கிடைக்கும் பணத்தை வைத்து ஏழை விவசாயி ஒருவருக்கு பசு மாடு வாங்கிக் கொடுக்க திட்டமிட்டுள்ளார் ரஞ்சித்.
இது குறித்து ரஞ்சித் கூறுகையில்
எனது ஓவியங்களில் இருந்து கிடைக்கும் பணத்தில் ஒரு பைசாவைக் கூட எடுக்க மாட்டேன். கடவுள் எனக்கு திறமையை அளித்துள்ளார். அதை வைத்து சமூகத்திற்கு உதவ விரும்புகிறேன். பசுக்களை நாம் மதிக்க வேண்டும். தாய்ப்பாலை அடுத்து நமக்கு கிடைக்கும் அரிய பொருள் பசுவின் பால்.
கலாம் சார் என் ஓவியத்தை பார்த்தால் நான் ஆசிர்வதிக்கப்பட்டவன் ஆவேன். ராணுவம் தான் என் வாழ்க்கை. அது எனக்கு அனைத்தையும் அளித்துள்ளது. என்னை ஓவியம் வரை ஊக்கப்படுத்தும் மூத்த அதிகாரிகள், சீனியர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
ரஞ்சித் தற்போது பெங்களூரில் உள்ள கேரளா மற்றும் கர்நாடகா சப்-ஏரியா கமாண்டில் பணிபுரிகிறார்.