தீவிரவாதிகளை தீரத்தோடு தடுத்த ராணுவ வீரர் மனைவிகள்.. பெரும் அசம்பாவிதத்தை தடுத்தனர்
ஸ்ரீநகர்: காஷ்மீரில் நேற்று நடந்த தீவிரவாத தாக்குதலின்போது, ராணுவ வீரர்கள் இருவரின் மனைவிகள் சமயோஜிதமாகவும், தைரியமாகவும் செயல்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நாசவேலைகளில் ஈடுபடுவதற்காக பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் காஷ்மீர் வழியாக ஊடுருவி தாக்குதல் நடத்துவதை வாடிக்கையாக கொண்டு உள்ளனர்.
இந்த நிலையில் தீவிரவாதிகள் சிலர் ஜம்மு புறநகர் பகுதியான 'நக்ரோட்டா'வில் உள்ள ராணுவத்தின் 16வது படைப்பிரிவு முகாம் மீது நேற்று திடீர் தாக்குதல் நடத்தினர்.
நேற்று காலை 5.30 மணிஅளவில் தீவிரவாதிகள் சிலர் போலீஸ் சீருடையில் முகாம் அருகே வந்தனர். அவர்கள் கையெறி குண்டுகளை வீசியதுடன் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ராணுவத்தினர் மீது சரமாரியாக துப்பாக்கிகளாலும் சுட்டனர்.
பிணை கைதிகள்
பின்னர் அப்பகுதியில் இருந்த 12 வீரர்கள், 2 பெண்கள், 2 குழந்தைகள் என 16 பேரை அவர்கள் பணயக் கைதிகளாக பிடித்தும் வைத்துக் கொண்டனர். இதனால் ராணுவத்தினர் பயங்கரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்துவதில் முதலில் சற்று தாமதம் ஏற்பட்டது. எனினும், பின்னர் வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர்.
சண்டை முடிவு
தீவிரவாதிகள் பிணைக் கைதிகளாக ராணுவ வீரர்கள் உள்பட 16 பேரை பிடித்து வைத்து இருந்ததால் அவர்களை மீட்க ராணுவ வீரர்கள் சாதுர்யமாகவும் அதே நேரம் வீரத்தோடும் செயல்பட்டனர். சுமார் 13 மணி நேரம் இருதரப்பினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நீடித்தது. மாலை 6.30 மணி அளவில் சண்டை முடிவுக்கு வந்தது.
7பேர் வீர மரணம்
தீவிரவாதிகள் தாக்குதலில் ராணுவ அதிகாரிகள் இருவரும், வீரர்கள் 5 பேரும் வீர மரணம் அடைந்தனர். தாக்குதலில் ஈடுபட்ட 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். பணயக் கைதிகளாக பிடிபட்ட அத்தனை பேரையும் ராணுவ வீரர்கள் வெற்றிகரமாக மீட்டனர்.
இதனிடையே, ராணுவ வீரர்கள் குடும்பத்தோடு தங்கும் பகுதி அமைந்துள்ள குடியிருப்புக்குள் தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றபோது, கைக்குழந்தையை வைத்திருந்த இரு பெண்கள் அதை தடுத்துள்ளனர்.
பெண்கள்
வீடுகளிலிருந்த மேஜை, பிரிட்ஜ் உள்ளிட்ட அனைத்து வகை சமான்களையும் கதவுக்கு பின்னால் அடுக்கி வைத்து தீவிரவாதிகள் மேலும் முன்னேறாத வண்ணம் பார்த்துக் கொண்டனர். இதனால், குடியிருப்புக்குள் தீவிரவாதிகள் நுழைவது தவிர்க்கப்பட்டது. அல்லது பெண்கள், குழந்தைகள், அதிகாரிகள் என பலரையும் தீவிரவாதிகள் பிணையக் கைதிகளாக பிடித்து வைத்திருக்க வாய்ப்பு இருந்தது.