அல்கொய்தா தீவிரவாதிகள் இன்று பெங்களூரு என்ஐஏ கோர்ட்டில் ஆஜர் - 10 நாள் காவலில் எடுக்க திட்டம்
தமிழகத்தில் கைதான அடிப்படைவாத இயக்கத்தை சேர்ந்த 5 பேரும் பெங்களூரு சிறப்பு என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் இன்று மாலை ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
பெங்களூரு: சென்னை மற்றும் மதுரையில் அல்கொய்தா அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்த 5 பேரை தேசிய புலனாய்வு அதிகாரிகள் இரு தினங்களுக்கு முன்பு கைது செய்தனர். அவர்களிடம் இருந்து வெடி பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பிரதமர் மோடி உள்ளிட்ட 32 முக்கிய தலைவர்களை கொலை செய்ய திட்டம் தீட்டியது அம்பலமானது. இவர்களுக்கு தென் மாநிலங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்புகளில் தொடர்பு இருந்தது தெரியவந்தது.
மதுரையில் கைது செய்யப்பட்ட 4 பேர் மேலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். சென்னையில் கைது செய்யப்பட்ட தாவுத் சுலைமான், சைதாப்பேட்டை பெருநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
கைது செய்யப்பட்ட 5 பேரையும் விசாரணைக்காக பெங்களூரு கொண்டு செல்ல நீதிமன்றங்கள் அனுமதி அளித்துள்ளனர். இதையடுத்து சுலைமான், செவ்வாய்கிழமை இரவே விமானம் மூலம் பெங்களூருவுக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மதுரையில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள் 4 பேரும் சாலை வழியாக பெங்களூருக்கு கொண்டு செல்லப்பட்டனர். இவர்கள் 5 பேரும் பெங்களூருவில் உள்ள என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று மாலை ஆஜர்படுத்த உள்ளனர். நீதிமன்றத்தின் அனுமதி பெற்று 5 பேரையும் 10 நாட்கள் காவலில் எடுத்து தேசிய புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்த உள்ளனர். இதில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.