டெல்லியில் பெண் பயணியை பலாத்காரம் செய்த டாக்சி டிரைவர் ஏற்கனவே இதே போல செய்து சிக்கியவர்!
டெல்லி: டெல்லியில் உபேர் டாக்சியில் பயணித்த பெண்ணை பலாத்காரம் செய்து சீரழித்து கைதாகியுள்ள டிரைவர், ஏற்கனவே கடந்த 2011ம் ஆண்டும் இதேபோல பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுக் கைதானவர் என்று டெல்லி போலீஸார் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் பிரபலமான உபேர் டாக்சியின் டிரைவரான சிவக்குமார் யாதவ் என்ற 32 வயது டிரைவர், தனது டாக்சியில் பயணித்த பயணியை பாலியல் பலாத்காரம் செய்த செயல் டெல்லியின் பாதுகாப்பு குறித்த பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் யாதவ் இதுபோல ஏற்கனவே 2011ம் ஆண்டிலும் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து சிக்கியவர் என்று தெரிய வந்துள்ளது. ஆனால் அவரது பின்னணி குறித்து அறிந்து கொள்ளாமலேயே உபேர் நிறுவனம், இவரை பணியில் சேர்த்துள்ளது.
2011ம் ஆண்டு குர்கானில் உள்ள ஒரு பப்பில் வைத்து 22 வயது பெண் ஊழியரை பாலியல் பலாத்காரம் செய்து சிக்கியவர் யாதவ். அப்போது அவர் 7 மாதம் திஹார் சிறையிலும் இருந்துள்ளார். சம்பவத்தின்போது ஒரு மாலுக்கு வந்த அந்தப் பெண் ஊழியர் யாதவ் ஓட்டிய டாக்சியை வாடகைக்குப் பிடித்து அதில் பயணித்தபோதுதான் அந்த அக்கிரமத்தில் ஈடுபட்டார் யாதவ். வழக்குப் பதிவு செய்து சிறைத் தண்டனையும் பெற்ற பின்னர் வெளியில் வைத்து அந்தப் பெண்ணுடன் யாதவ் சமசரமாகிக் கொண்டார். இதனால் வழக்கு வாபஸ் பெறப்பட்டு விடுதலையானார்.
தற்போது மீண்டும் அதேபோன்ற தவறைச் செய்துள்ளார் யாதவ். குர்கானைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தில் நிதி அதிகாரியாகப் பணியாற்றி வந்த 27 வயது பெண்ணிடம்தான் தற்போது வேலையைக் காட்டியுள்ளார் யாதவ். டாக்சியில் வந்தபோது தான் தூங்கி விட்டதாகவும், விழித்து எழுந்தபோது ஒரு தனியான இடத்தில் டாக்சி நிறுத்தப்பட்டதாகவும், தன்னிடம் டிரைவர் யாதவ் அத்துமீறி நடந்து பலாத்காரம் செய்து விட்டதாகவும் பாதிக்ப்பட்ட பெண் கூறியுள்ளார்.
பின்னர் வடக்கு டெல்லியில் உள்ள தனது வீட்டுக்கு அருகே காரை நிறுத்திய யாதவ், இதை யாரிடமும் சொல்லக் கூடாது என்று மிரட்டியதோடு, மீறிச் சொன்னால், பெரிய இரும்புக் குழாயை எடுத்து செருகி விடுவேன் என்றும் மிரட்டியதாகவும் அவர் கூறியுள்ளார்.
2012ம் ஆண்டு ஓடும் பேருந்தில் வைத்து மருத்துவ மாணவி நிர்பயாவை பாலியல் பலாத்காரம் செய்த கும்பலைச் சேர்ந்த ஒரு கொடியவன், இதேபோல இரும்புக் குழாயை எடுத்து நிர்பயாவின் மர்ம உறுப்பில் செருகினான் என்பது நினைவிருக்கலாம்.
இந்த சம்பவம் குறித்து உபேர் டாக்சி நிறுவனம் வருத்தமும், அதிர்ச்சியும் தெரிவித்துள்ளது. இது ஏற்க முடியாத கொடும் குற்றச் செயல் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.