இந்திய ஜனநாயகம் கருப்பு பணத்தால் இயங்குகிறது.. தேர்தல் ஆணையம் மீது ஜேட்லி கடும் விமர்சனம்
டெல்லி: தேர்தலில் கருப்பு பணம் புழங்குவதை தடுப்பது பெரும் சவாலாக இருக்கிறது என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி கூறியுள்ளார். தேர்தல் கமிஷனையும் குறை கூறியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற பொருளாதார அருண் ஜேட்லி, மாநாட்டில் சிங்கப்பூர் துணை பிரதமர் தர்மர் சண்முகமும் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது பேசிய அருண் ஜேட்லி, அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் ரொக்க பரிவர்த்தனை பெருமளவில் குறைந்துவிட்டதாகவும், பணமற்ற பரிவர்த்தனை அதிகரித்துள்ளதால் கருப்பு பண புழக்கம் குறைந்துள்ளது என்றார்.
ஆனாலும் கூட தேர்தல்களின் போது அரசியல் கட்சிகளிடம் புழங்கும் கருப்பு பணத்தை கட்டுப்படுத்துவதில் தேர்தல் ஆணையம் தோற்றுவருவதாகவும், கருப்பு பண புழக்கம் பற்றி குறைசொல்வதை எதிர்க்கட்சிகள் விட்டுவிட்டு அதை தடுப்பதற்கான யோசனைகளை தெரிவிக்க வேண்டும் என்றார் ஜேட்லி.
அரசியல் கட்சிகளுக்கு தாம் ஏற்கனவே கடிதம் அனுப்பியுள்ளதாக கூறிய அவர், இதற்கு எந்த கட்சியிடம் இருந்தும் பதில் வரவில்லை என்று சுட்டிக் காட்டினார்.
கருப்பு பணத்தை வைத்து தேர்தலை சந்திக்கும் இப்போதைய நிலைமையே நீடிக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் விரும்புகிறதா என்று அவர் கேள்வி எழுப்பினார்.
70 வருடங்களாக இந்திய ஜனநாயகம் என்பது கண்ணுக்கு தெரியாத, கணக்கில் வராத பணத்தால்தான் கட்டமைக்கப்பட்டுவருகிறது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இப்படித்தான் இயங்கி கொண்டுளளது. நான் தனிப்பட்ட முறையில் ஒத்துழைக்க வலியுறுத்தியும் கூட எந்த கட்சியும், பணமற்ற தேர்தலை நடத்த என்ன செய்யலாம் என்ற திட்டத்தோடு என்னை அணுகவேயில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.