மாத சம்பளம் வாங்குவோரின் எதிர்பார்ப்பு புஸ்ஸ்: வருமான வரிச் சலுகையில் மாற்றம் இல்லை
டெல்லி: மத்திய அரசின் 2015-2016 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை மக்களவையில் நிதியமைச்சர் அருண்ஜெட்லி இன்று தாக்கல் செய்தார். இதில் மிகவும் எதிர்பார்த்த வருமான வரி விலக்கு வரம்பு உயர்த்தப்படாதது மாதச் சம்பளதாரர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
பட்ஜெட் என்றாலே வருமான வரி எவ்வளவு, விலக்கு எவ்வளவு என்பது தான் பெரும்பாலான நடுத்தர, ஊதியம் வாங்கும் குடும்பங்களின் பார்வையாக உள்ளது. அந்த வகையில் இந்த பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு தொடர்பாக பல்வேறு எதிர்பார்ப்புகள் இருந்தன. ஆனால் மாதச் சம்பளம் வாங்குபவர்களின் வருமானவரியில் எந்தவிதமாற்றமும் இல்லை என்று அறிவித்து அருண்ஜெட்லி ஏமாற்றிவிட்டார்.
நீண்டநாள் கோரிக்கை
கடந்த 2014ம் ஆண்டு ஜூலை மாதம் வரை ஆண்டுக்கு ரூ. 2 லட்சம் வரையிலான ஊதியத்துக்கு வருமான வரி செலுத்த தேவையில்லாமல் இருந்தது. இந்த வருமான வரி விலக்கு உச்ச வரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கையாகும்.
பிரணாப் – சிதம்பரம் – ஜெட்லி
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் நிதியமைச்சர்களாக இருந்த பிரணாப் முகர்ஜியும் ப.சிதம்பரமும் மாத ஊதியம் பெறுவோருக்கு வரி விலக்கில் எந்த சலுகையும் அளிக்கவில்லை. ஆனால் பாஜக அரசு பதவியேற்ற உடன் கடந்த ஜூலை மாதம் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த அருண் ஜெட்லி மாதசம்பளம் பெறுவோர் ரூ.2,50,000 வரை வருமான வரி செலுத்த தேவையில்லை என்று அறிவித்தார்.
ரூ.3,00,000 வரை எதிர்பார்ப்பு
இதன்படி வருமான வரி விலக்கு தற்போது மாத சம்பளம் பெறுபவர்கள் தங்களது சம்பளம் 2 லட்சத்து 50,000 ரூபாய்க்குள் இருந்தால் வருமான வரி செலுத்த தேவையில்லை. 2015ஆம் ஆண்டு பட்ஜெட்டில் மேலும் ரூ.50,000 ரூபாய் வரிச்சலுகை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
பாக்கெட்டில் பணம்
வருமான வரி விலக்கு உச்சவரம்பை ரூ. 3 லட்சமாக உயர்த்தினால் கூட வரி செலுத்துவோருக்கு ஆண்டுக்கு ஐந்தாயிரம் ரூபாய் முதல் பத்தாயிரம் வரையாவது மிஞ்சும் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் ஏமாற்றிவிட்டார் ஜெட்லி.
தனிநபர் வருமான வரிவிலக்கு
வருமான வரி விலக்குக்கான உச்ச வரம்பு அதே ரூ.2.5 லட்சமாகவே தொடரும் என்று அறிவித்த ஜெட்லி, தனி நபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பிலும் மாற்றம் செய்யவில்லை. எனினும், மருத்துவ காப்பீட்டுக்கான பிரீமியத்துக்கான வரி விலக்கு உச்ச வரப்பை ரூ. 15,000ல் இருந்து ரூ. 25,000 வரை உயர்த்தியது, பயண அலவன்சுக்கான வரி விலக்கை மாதம் ரூ.800ல் இருந்து ரூ. 1,600 வரை உயர்த்தியது என சிறிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த வகையில் இப்போது இருக்கும் வரி விலக்கு அளவு கொஞ்சம் உயர்ந்து ரூ.4,44,200 வரை கூடியுள்ளது. அதாவது மாத ஊதியம் பெறுவோர் வீட்டுக் கடன், எல்ஐசி பிரீமியம், பிஎப், பிபிஎப் ஆகியவற்றில் முதலீடு செய்து ஆதாரங்களை சமர்ப்பித்தால் அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ.4,44,200 வரை வரி விலக்கை பெறலாம்.
வரிஏய்ப்புக்கு தண்டனை
வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாவிட்டாலோ அல்லது வெளிநாட்டில் உள்ள சொத்துக்கள் விவரங்களை தெரிவிக்காவிட்டாலோ 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். மேலும் மறைக்கப்பட்ட சொத்து, பணத்தின் அளவைப் போல 300 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என்று கூறியுள்ளார் நிதியமைச்சர் ஜெட்லி.