ஆளுநர் பதவியை ராஜிநாமா செய்ய மாட்டேன்... ஜோதி பிரசாத் ராஜ்கோவா அதிரடி
டெல்லி: அருணாசலப் பிரதேசத்தின் ஆளுநர் பதவியை ராஜிநாமா செய்யப் போவதில்லை எனவும், வேண்டுமென்றால் அப்பதவியிலிருந்து தன்னை குடியரசுத் தலைவர் நீக்கிக் கொள்ளட்டும் என்றும் அந்த மாநில ஆளுநர் ஜோதி பிரசாத் ராஜ்கோவா தெரிவித்துள்ளார்.
அருணாசலபிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சியை மத்திய அரசு அமல்படுத்தியது செல்லாது என்றும், காங்கிரஸ் அரசை மீண்டும் அமைக்குமாறும் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்தது. பின்னர் குடியரசுத் தலைவர் ஆட்சி ரத்து செய்யப்பட்டு காங்கிரஸ் ஆட்சி மீண்டும் அமைந்தது.
இதனிடையே, அருணாசலப் பிரதேச மாநில ஆளுநர் ஜோதி பிரசாத் ராஜ்கோவா உடல்நலம் பாதிக்கப்பட்டு அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டியில் சிகிச்சை பெற்று வந்தார். இதைத் தொடர்ந்து 47 நாள்களுக்குப் பிறகு (ஆக.13) அருணாசலப் பிரதேசத்துக்குத் திரும்பினார்.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி, ஆளுநர் ஜோதி பிரசாத் ராஜ்கோவாவின் உடல்நிலையைக் காரணம் காட்டி அப்பதவியிலிருந்து ராஜிநாமா செய்யுமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக குவாஹாட்டியைச் சேர்ந்த தனியார் செய்தி நிறுவனத்துக்கு திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி, குவாஹாட்டியைச் சேர்ந்த எனக்கு நன்கு அறிமுகமான நபர் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, எனது உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு, ஆளுநர் பதவியிலிருந்து நான் ராஜிநாமா செய்ய வேண்டும் என மத்திய அரசு கேட்டுக் கொண்டதாகத் தெரிவித்தார். இந்தத் தகவலின் உண்மைத்தன்மை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் கேட்டதற்கு அதுகுறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று கூறிவிட்டார்.
ஆகஸ்ட் 30-ஆம் தேதி, வேறொரு மத்திய அமைச்சரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, அந்த நபர் கூறியது உண்மை என்றும், ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் அருணாசலப் பிரதேச ஆளுநர் பதவியிலிருந்து நான் விலக வேண்டும் என்றும் கூறினார். உடல்நலப் பாதிப்பிலிருந்து நான் பூரணமாக குணமாகிவிட்டேன். அரசமைப்புச் சட்டப் பதவியான ஆளுநர் பதவியில் எனது பணிகளை சிறப்பாகச் செய்து வருகிறேன்.
எனினும், நான் இந்தப் பதவியில் நீடிப்பதை மத்திய அரசு விரும்பவில்லையெனில், பிரதமரும், அவரது அமைச்சரவையும் குடியரசுத் தலைவருக்குத் தெரியப்படுத்தி, அவர் என்னை இப்பதவியிலிருந்து நீக்கட்டும். அதுவரை நான் ராஜிநாமா செய்ய மாட்டேன். பதவி நீக்கத்துக்கான உத்தரவு கிடைத்தால் ஆளுநர் மாளிகையை காலி செய்வதற்கு ஏதுவாக கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி முதல் தயார் நிலையில் உள்ளேன்.
இந்தப் பதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக பிரதமர் உள்பட யாரையும் நான் அணுகியது இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.