உங்க மன்னிப்பு எங்க மகனை திருப்பி தருமா? கேஜ்ரிவாலுக்கு விவசாயி குடும்பம் பதிலடி
டெல்லி: விவசாயி தற்கொலை விவகாரத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மன்னிப்பு கோரியுள்ளதை கஜேந்திரசிங் குடும்பத்தினர் நிராகரித்துள்ளனர்.
டெல்லியில் நடைபெற்ற ஆம் ஆத்மி பேரணியில் விவசாயி கஜேந்திரசிங் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
டெல்லி போலீசார் ஆம் ஆத்மி தலைவர்கள்தான் கஜேந்திரசிங்கை தூக்கிலிட தூண்டியதாக வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
கேஜ்ரிவால் மன்னிப்பு
இவ்விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சிகள் ஒருவரை ஒருவர் தொடர்ந்து குற்றம் சாட்டியும் வருகின்றனர். இதனிடையே இன்று காலையில் செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கேஜ்ரிவால், நான் சுமார் ஒரு மணிநேரம் பேசுவதாக இருந்தது, ஆனால் 10-15 நிமிடங்களில் முடித்துவிட்டேன். இது தவறானது என்று நான் நினைக்கின்றேன். நான் பேசியிருக்க கூடாது. அது யாருடைய உணர்வையும் காயப்படுத்தி இருந்தால், நான் மன்னிப்பு கேட்டுக் கொள்ள விரும்புகிறேன் என்றார்.
தந்தை நிராகரிப்பு
ஆனால் கஜேந்திர சிங்கின் தந்தை பானேசிங், கேஜ்ரிவால் மன்னிப்பு எனது மகனை திருப்பிதராது என்று நிராகரித்துவிட்டார்.
மன்னிப்பு போதுமா
மேலும் கேஜ்ரிவால் மகனுக்கு இப்படி எதுவும் நடந்து இருந்தால், நானும் போய் மன்னிப்பு கேட்டால் போதுமா, மன்னிப்பு என்னுடைய மகனை திருப்பித்தருமா? இவை அனைத்தும் வெட்ககேடானது. மிகப்பெரிய சம்பவம் நடந்துஉள்ள நிலையில் அவர் மன்னிப்பு கேட்டுக் கொண்டு உள்ளார். அவர் எப்படி இந்தஅரசை நடத்தப்போகிறார்?... இந்த குழந்தைகளை யார் பார்த்துக் கொள்வார்கள்? என்றார் பானே சிங்.
ஏங்க தடுக்கலை?
கஜேந்திரசிங்கின் மாமனார் கூறுகையில், கேஜ்ரிவால் மன்னிப்பு கேட்டதிலே அங்கு ஏதேனும் தவறு நடந்திருக்கிறது என்பதையே காட்டுகிறது. இதற்கு பொறுப்பானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க எங்களுக்கு அதிகாரம் எதுவும் கிடையாது.. தூக்குப் போட முயற்சித்தவரை யாரும் ஏன் தடுக்கவில்லை என்றார்.