சுப்ரீம் கோர்ட் கோடை விடுமுறை முடிந்தது.. ஜெயலலிதா சொத்துக்குவிப்பு தீர்ப்பு எப்போது?
டெல்லி: கோடை விடுமுறைக்கு பிறகு உச்சநீதிமன்றம் இன்று மீண்டும் பணிகளை தொடங்கியுள்ள நிலையில் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு மேல் முறையீட்டு விசாரணை, உச்சநீதிமன்ற நீதிபதிகள், பி.சி.கோஸ் மற்றும் அமிதவா ராய் ஆகியோர் முன்னிலையில் நடந்து வந்தது.
கர்நாடக தரப்பு, ஜெயலலிதா உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கு உள்ளானோர் தரப்புகள் வாதத்தை நிறைவு செய்த நிலையில், கோடை விடுமுறை தொடங்கும் முன்பாக, தேதி குறிப்பிடாமல் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை ஒத்தி வைத்தது.
இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் விடுமுறை காலம் முடிந்து இன்று மீண்டும் கூடியுள்ளது. எனவே ஜெயலலிதா தீர்ப்பு எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோல அருணாச்சல பிரதேச மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டது தொடர்பான வழக்கின் தீர்ப்பும் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அடுத்த மாத இறுதிக்குள் இவ்விரு வழக்குகளிலும் தீர்ப்பு வெளியாகும் என்று கோர்ட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே தமிழக அரசியலில் பரபரப்பை எதிர்பார்க்கலாம்.