மகா. தேர்தலில் 2 இடங்களில் வென்று சாதனை படைத்த ஆந்திராவின் அகில இந்திய மஜ்லீஸ் கட்சி!
மும்பை: மகராஷ்டிரா தேர்தலில் கட்சிகள் பெற்ற வெற்றிகள், தோல்விகள் இதற்கெல்லாம் நடுவிலே அங்கு இரண்டு இடங்களில் வெற்றி பெற்று ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது ஆந்திராவைச் சேர்ந்த அகில இந்திய மஜ்லிஸ் இ இட்டாஹுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சி.
ஆந்திராவை பிரதானமாக, குறிப்பாக ஹைதராபாத்தை மையமைகக் கொண்டு இயங்கும் இக்கட்சி முதல்முறையாக ஆந்திராவிற்கு வெளியில் களம் கண்டு வெற்றிக் கனியைப் பறித்துள்ளது.
மேலும் பிரபலமான கட்சிகளுக்கு இடையிலான சூடு பறக்கும் போட்டியில் களத்தில் இறங்கி 2 இடங்களில் வெற்றியும் பெற்றுள்ளது இக்கட்சி.
பைகுலா பகுதியில் வெற்றி:
மும்பையின் பைகுலா பகுதியில் ஏஐஎம்ஐஎம் கட்சியின் வாரிஷ் யூசுப் பதான், பாஜகவின் மிகவும் வலிமை வாய்ந்த வேட்பாளரான மதுக்கர் ஜி.சவான் மற்றும் அகில் பாரதிய சேனா கட்சியின் கீதா கவுலி ஆகியோருக்கு எதிராக போட்டியிட்டு 25,314 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
ஔரங்காபாத்:
ஔரங்காபாத் சென்ட்ரலில், சிவ சேனா கட்சியின் பிரதீப் ஜெய்ஸ்வாலை எதிர்த்து போரிட்ட ஏஐஎம்ஐஎம் வேட்பாளரான பத்திரிகையாளர் இம்தியாஸ் ஜலீல், 30,000 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
ஒளரங்காபாத் கிழக்கில் தோல்வி:
ஆனால், ஔரங்காபாத்தின் கிழக்கு பகுதியில் போட்டியிட்ட அப்துல் காபர் கதாரி, பாஜகவின் அதுலிடம் 15,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார்.
நாண்டட் தெற்கில் தோல்வி:
அதேபோல், நாண்டட் தெற்குப் பகுதியில், ஏஐஎம்ஐஎம் கட்சியின் மோயின் அக்தர், சிவ சேனாவின் ஹேமந்த் ஸ்ரீராம் பாட்டிலிடம் தோல்வியுற்றார்.
மொத்த இடங்கள்:
மகாராஷ்டிராவில் மொத்தமாக 24 இடங்களில் போட்டியிட்ட இக்கட்சி, மும்பையில் மட்டும் 16 இடங்களில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
முகம்மது ரபியின் மகனுக்கு சீட்:
இக்கட்சி மும்பாதேவி தொகுதியில் மறைந்த பாடகர் முகம்மது ரபியின் மகன் ஷாஹித் ரபிக்கு சீட் கொடுத்திருந்தது. ஆனால் அவர் 3வது இடத்தையே பிடித்தார்.
முஸ்லீம் வாக்கு வங்கியில் ஓட்டை:
இக்கட்சி, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கியில் பெரிய அளவில் ஓட்டை போட்டுள்ளது இரு கட்சிகளையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
ஓவைஸி சகோதரர்கள் பிரசாரம்:
கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைஸி மற்றும் அவரது சகோதரர் அக்பருதீன் ஓவைஸி ஆகியோர் தேர்தல் பிரசாரத்தின்போது மும்பையில் வந்து பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியிருந்தனர்.
காங், தேசியவாத காங் மீது அதிருப்தி:
மும்பை வாழ் முஸ்லீ்ம்களிடையே காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் மீது ஏற்பட்ட அதிருப்தியே மஜ்லிஸ் கட்சியின் எழுச்சிக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.