அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி பாகிஸ்தான் கவனத்தை ஈர்க்கத் துடிக்கும் ஆசியா அன்ட்ராபி
ஸ்ரீநகர்: அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் காஷ்மீரைச் சேர்ந்த ஆசியா அன்ட்ராபி என்ற பெண்மணி. இவர் பிரிவினைவாத அனைத்துக் கட்சி ஹுரியத் மாநாட்டுக் கட்சியின் ஒரு அங்கமான துக்தாரன் இ மில்லத் அமைப்பின் தலைவி ஆவார். இது ஹூரியத் மாநாட்டின் பெண்கள் பிரிவாகும்.
பாகிஸ்தானுடன் காஷ்மீரை இணைக்க வேண்டும் என்பதே ஹூரியத் மாநாட்டின் கொள்கையாகும். இதற்கேற்ப ஆசியாவும் தொடர்ந்து பாகிஸ்தான் ஆதரவு செயல்பாட்டை மேற்கொண்டு வருகிறார். தனது வீட்டில் இவர் பாகிஸ்தான் தேசியக் கொடியை ஏற்றுகிறார். பாகிஸ்தான் சுதந்திர தினத்தைக் கொண்டாடினார். பாகிஸ்தான் தேசிய கீதத்தை மட்டுமே பாடியும் வருகிறார்.
இந்த நிலையில் ஆகஸ்ட் 14ம் தேதியன்று, பாகிஸ்தான் சுதந்திர தினத்தின்போது லாகூரில் நடந்த பேரணியின்போது இவர் தொலைபேசி மூலம் ஆற்றிய உரை ஒலிபரப்பு செய்யப்பட்டது. இது பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.
புகழ் வெளிச்சத்திற்காகவா
தொடர்ந்து இவர் பாகிஸ்தான் ஆதரவு போக்குடன் செயல்பட்டு வருவது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. தன்னை புகழ் வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதற்காக இவர் இப்படி நடந்து கொள்வதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இரும்புப் பெண்மணி
பிரிவினைவாதிகள் மத்தியில் இவருக்கு இரும்புப் பெண் என்ற பெயரும் உள்ளது. இவரது துணிச்சலான பேச்சுக்காக இவருக்கென்று பெரும் ஆதரவாளர் கூட்டமும் உள்ளது.
பேசினாலே சர்ச்சைதான்
ஆசியா பேசினாலே சர்ச்சைதான். சர்ச்சைக்குரிய வகையில் மட்டுமே அவர் பேசி வருகிறார். ஒருமுறை இவர் கூறுகையில், ஜார்ஜ் புஷ்ஷை எங்காவது எனது மகன் பார்த்தால் அவரைக் கொன்று விட வேண்டும். அப்படி அவன் செய்தால் அதற்காக நான் கர்வப்படுவேன் என்று கூறியிருந்தார்.
இந்திய ராணுவம் மீது துவேஷம்
இந்திய ராணுவம் குறித்தும் அவர் துவேஷமாக பல கருத்துக்களைக் கூறியுள்ளார். இந்திய ராணுவ வீரர்களைக் கொன்று குவிக்க வேண்டும் என்பதே தனது கனவு என்றும் இவர் கூறியுள்ளார்.
ஹிஸ்புல் முஜாஹிதீன் கணவர்
இவரது கணவர் பெயர் ஆசிக் ஹுசேன் பக்தூ. இவர் ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பு நிறுவியவர்களில் ஒருவர் ஆவார். ஆசியா, தனது முகத்தை ஒருபோதும் வெளிப்படுத்தியதில்லை.
2010ம் ஆண்டு கைதானவர்
கடந்த 2010ம் ஆண்டு இவர் கைது செய்யப்பட்டார். அப்போது இந்தியாவுக்கு எதிராக போர் தொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டது. வன்முறையைத் தூண்டியதாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
2015ல் புது வழக்கு
கடந்த மார்ச் மாதம் தனது வீட்டில் பாகிஸ்தான் கொடியை ஏற்றி, பாகிஸ்தான் தேசிய கீதத்தைப் பாடியதாக இவர் மீது புதிய வழக்குத் தொடரப்பட்டது. 2010ல் காஷ்மீரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கல்வீச்சு சம்பவத்தின்போது இவர்தான் முக்கியப் பங்கு வகித்தார். பலரை திரட்டி வந்து கல்வீச்சில் ஈடுபட வைத்தார் என்று குற்றம் சாட்டப்பட்டது.
பாகிஸ்தான் கவனத்தைக் கவர
ஆசியாவின் முக்கிய நோக்கமே, பாகிஸ்தான் கவனத்தை தன் பக்கம் விழ வைப்பதுதான் என்று சொல்கிறார்கள். இதற்காகவே அவர் தொடர்ந்து சர்ச்சையாகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் பேசி வருகிறார் என்று பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகிறார்கள்.
பெண்களைத் திரட்ட முயற்சி
இந்தியாவுக்கு எதிராக பெண்களைத் திரட்டும் முயற்சியிலும் ஆசியா தீவிரமாக ஈடுபபட்டுள்ளார். இந்தியாவுக்கு எதிராக போரிடுவதன் முக்கியத்துவம் குறித்தும் இவர் தொடர்ந்து பேசி வருகிறார். இந்தியாவுக்கு எதிரான போரில் பெண்களும் பங்கெடுத்தால் மட்டுமே போர் வெற்றி பெறும் என்றும் இவர் கூறி வருகிறார்.
இஸ்லாமிய நாட்டுக்கு ஆதரவு
தனி சுதந்திர இஸ்லாமியக் குடியரசை நிறுவுவது குறித்தும் பேசி வருகிறார். தனது மகன்கள் தற்கொலைப் படை தீவிரவாதிகளாக மாறினால் அது தனக்குப் பெருமை தருவதாகும் என்றும் இவர் பலமுறை பேசியுள்ளார்.
35 வருடமாக பாகிஸ்தான் கொடியேற்றுகிறார்
சமீபத்தில் அவர் கூறுகையில், பாகிஸ்தான் தேசியக் கொடியை நான் எனது வீட்டில் தொடர்ந்து 35 வருடமாக சுதந்திர தினத்தன்று ஏற்றி வருகிறேன் என்று கூறியிருந்தார் ஆசியா.
பாகிஸ்தான் கிரிக்கெட்டில் வென்றால்
இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால் காஷ்மீரில் எத்தனை வீடுகளில் பாகிஸ்தான் தேசியக் கொடி ஏற்றப்படுகிறது என்பது வந்து பாருங்கள் என்றும் ஒருமுறை அவர் கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.