அதிக ஆசிரியர்கள் கேட்டு போராடிய மாணவிகளிடம் பாலியல் வெறியாட்டம் நடத்திய போலீஸ்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் அதிகளவிலான ஆசிரியர்கள் வேண்டுமென்று போராட்டம் நடத்திய பள்ளி மாணவர்களின் மீது வெறியாட்டம் நடத்திய போலீசாரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராஜஸ்தானின் டோங்க் மாவட்டத்தின், சுரு கிராமத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் 300 மாணவர்களுக்கும் மேல் பயின்று வருகின்றனர். அவர்களுக்கு வெறும் 7 ஆசிரியர்கள் மட்டுமே கல்வி கற்பிக்க உள்ளனர். அரசு விதிகளின் படி,300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கொண்ட பள்ளிக்கு சராசரியாக 22 ஆசிரியர்கள் இருக்க வேண்டும். ஆனால், இங்கு குறைந்த அளவிலேயே ஆசிரியர்கள் உள்ள காரணத்தினால் அரசுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர்.
இதனையடுத்து செப்டம்பர் 29ஆம் தேதியன்று அப்பள்ளியில் படிக்கும் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், அப்போராட்டத்தினை தடுக்க வந்த 4 போலீசார் மாணவர்களை லத்தியால் சரமாரியாக அடிக்க ஆரம்பித்தனர். மேலும், அவர்களுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தலையும் அளித்துள்ளனர்.
போலீசாரால் பாலியல் வன்முறைக்கு உள்ளான 14 முதல் 16 வயதான சிறுமிகள் தற்போது தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று அரசு அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர். அவர்களில் ஒரு சிறுமி போலீசாரின் லத்தி அடியால் இன்னும் நடக்க இயலாத நிலையில் உள்ளார்.
"அவர்கள் எங்களை மிகக் கொடூரமாக தாக்கினர். எங்களுடைய துப்பட்டாக்களைப் பிடித்து இழுத்து, தவறான செய்கைகளை செய்தனர்" என்று அவர் தெரிவித்துள்ளார். "எங்கள் மேல் சாராயத்தை ஊற்றியும் கொடுமை செய்தனர்" என்று மற்றொரு சிறுமி தெரிவித்துள்ளார்.
ஆனால், சிறுமிகளைத் தூண்டிவிட்டு ஆசிரியர்களும், பெற்றோர்களும் இவ்வாறு பொய்ப் புகார் அளிக்க வைத்துள்ளதாக அவர்கள் மேல் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகள் புகார் அளித்திருந்தனர். எனினும், இவ்விவகாரத்தில் ஒரு அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆசிரியர்கள் மீது குற்றம் சாட்டியதற்காக அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், இதுகுறித்த தீவிர விசாரணைக்கும் ராஜஸ்தான் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.