ஆர்எஸ்எஸ் பிரசாரகராக செயல்படும் ஆளுநர் ஆச்சார்யா-நீக்க கோரும் அஸ்ஸாம் முதல்வர்!!
குவஹாத்தி: அஸ்ஸாம் மாநில கூடுதல் பொறுப்பை வகிக்கும் ஆளுநர் பி.பி. ஆச்சார்யாவை நீக்கிவிட்டு நிரந்தர ஆளுநரை மத்திய அரசு நியமிக்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் தருண் கோகய் வலியுறுத்தியுள்ளார்.
மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நாகாலாந்து ஆளுநராக பி.பி. ஆச்சார்யா நியமிக்கப்பட்டார். அதேபோல் அஸ்ஸாம் ஆளுநராக இருந்த ஜே.பி. பட்நாயக்கும் மோடி அரசின் நெருக்கடியால் 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பதவி விலக நேரிட்டது.
இதனைத் தொடர்ந்து கடந்த ஓராண்டு காலமாக நாகாலாந்து ஆளுநரான பி.பி. ஆச்சார்யாவே அஸ்ஸாம் மாநிலத்தின் ஆளுநராகவும் கூடுதல் பொறுப்பை வகித்து வருகிறார். கடந்த சனிக்கிழமையன்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆச்சார்யா, இந்துஸ்தான் என்பது இந்துக்களுக்கு மட்டுமே உரியது என கூறியதாக சர்ச்சை எழுந்தது.
ஆனால் இதை நேற்று மறுத்த ஆச்சார்யா, இந்தியா சகிப்புத்தன்மை கொண்ட நாடு...பார்சி சமூகம் ஈரானில் இப்போது இல்லை.. ஆனால் இந்தியா அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளது. தொழிலதிபர்களான டாடா, கோத்ரேஜ், வாடியா போன்றவர்கள் பார்சிகளே என்று விளக்கம் கொடுத்திருந்தார்.
இதனிடையே ஆச்சார்யா, ஆர்.எஸ்.எஸ். பிரசாரகராக செயல்படுவதாகவும் அவரை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அம்மாநில முதல்வர் தருண் கோகய் போர்க்கொடி தூக்கியுள்ளார். இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை:
மாநிலத்தின் அரசியல் சாசனப்படியான தலைவராக இருப்பேன் என பதவி ஏற்ற உறுதிமொழியை மீறி இந்துக்களுக்கு மட்டுமே இந்துஸ்தான் சொந்தமானது என பேசி வருகிறார் பி.பி. ஆச்சார்யா. ஒரு மாநிலத்தின் அரசியல் சாசனப்படியான தலைவர் என்பதை விட ஆர்.எஸ்.எஸ். பிரசாரகத்தான் ஆச்சார்யா செயல்பட்டு வருகிறார்.
அஸ்ஸாம் ஆளுநராக பி.பி. ஆச்சார்யா நீடித்தால் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலின் போது பா.ஜ.க.வுக்காக தேர்தல் பணியாற்றவும் அவர் தயங்கமாட்டார். ஆகையால் அஸ்ஸாம் மாநிலத்தின் ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வரும் ஆச்சார்யாவை நீக்கிவிட்டு நிரந்தர ஆளுநரை மத்திய அரசு நியமிக்க வேண்டும்.
இவ்வாறு தருண் கோகய் வலியுறுத்தியுள்ளார்.