வீட்டு வேலை செய்த 14 வயது சிறுமியை சீரழித்த வழக்கில் அஸ்ஸாம் எம்.எல்.ஏ. கைது
கவுஹாத்தி: தனது வீட்டில் வேலை செய்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த அஸ்ஸாம் மாநில எம்.எல்.ஏ. கோபிநாத் தாஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
அஸ்ஸாமில் உள்ள போகோ தொகுதி எம்.எல்.ஏ. கோபிநாத் தாஸ். அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சியைச் சேர்ந்த அவரின் வீட்டில் கம்ரூப் மாவட்டம் ஹெக்ரா ஜோகிபுராவைச் சேர்ந்த 14 வயது சிறுமி வேலை பார்த்து வந்தார்.
தாஸின் வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்த அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி போகோ காவல் நிலைய கட்டுப்பாட்டில் உள்ள மந்திரா புறக்காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், தாஸ் தன்னை கவுஹாத்தியில் காரில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்திருந்தார்.
இதையடுத்து போலீசார் தாஸ் மீது வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் தாஸ் தலைமறைவாகிவிட்டார். ஒரு மாத காலமாக தலைமறைவாக இருந்த அவர் ஞாயிற்றுக்கிழமை கம்ரூப் மாவட்டத்தில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சரணடைய சென்றார். சரணடைய செல்லும் வழியில் அவர் அமின்காவ்னில் வைத்து போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட தாஸ் பாலாஷ்பாரி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக கம்ரூப் எஸ்.பி. இந்திராணி பருவா தெரிவித்துள்ளார். அந்த சிறுமியை தான் பாலியல் பலாத்காரம் செய்யவில்லை என்றும், இது தனக்கு எதிராக நடக்கும் சதி என்றும் தாஸ் முன்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.