மாணவிகளுடன் நெருக்கமான புகைப்படத்தை வெளியிட்ட அசாம் ஆசிரியர்
மாணவிகளுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை அசாம் ஆசிரியர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குவாஹாட்டி: அசாம் மாநிலத்தில் பள்ளி ஒன்றில் தன்னிடம் படிக்கும் சிறுமிகளுடன் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படத்தை ஆசிரியர் ஒருவர் வெளியிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மாதா, பிதா, குரு, தெய்வம் என்றும் எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்று ஆசிரியரை உயர்ந்த இடத்திலேயே நாம் வைத்துள்ளோம். நாம் கேட்பதை கொடுக்கும் கடவுளையும் ஆசிரியருக்கு அடுத்துதான் முக்கியத்துவத்தை வைத்து வரிசைப்படுத்தியுள்ளோம்.
அவ்வாறிருக்க, மாணவ, மாணவிகளை தங்கள் பிள்ளைகளை போல் கருத வேண்டிய ஆசிரியர்கள் பருவ வயதில் இருக்கும் சிறுமிகளை தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பது கலி முற்றிவிட்டது என்பதற்கான அறிகுறியை தவிர வேறென்ன சொல்வது.
அசாம் ஆசிரியர்
அசாம் மாநிலத்தில் ஹைலகண்டி மாவட்டத்தில் உள்ள ஹைட்லிசேரா எனும் கிராமத்தில் உள்ள பள்ளியின் ஆசிரியர் ஃபெய்சுதீன் லஷ்கார். இவர் தன்னிடம் பயிலும் மாணவிகளுடன் வகுப்பறையில் நெருக்கமாக இருப்பது போன்று புகைப்படம் எடுத்துள்ளார்.
பேஸ்புக்கில் வெளியீடு
அந்த புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
கைது செய்யவில்லை
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார் ஆசிரியரிடம் விசாரணை நடத்தினர். ஆனால் அவரை கைது செய்யவில்லை. இதனால் கிராமமக்களும், பெற்றோரும் கடும் கோபத்தில் உள்ளனர்.
பள்ளி நிர்வாகமும்...
பள்ளி நிர்வாகம் சார்பில் ஆசிரியர் மீது நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இதனால் இந்த பிரச்சினைக் குறித்து அசாமில் உள்ள தொலைக்காட்சியில் செய்திகள் வெளியாகியுள்ளன. தொலைக்காட்சிகளில் ஆசிரியர் ஒர் தொடர் குற்றவாளி என குறிப்பிடுகிறது.
வழக்குப் பதிவு
சமூக நடவடிக்கை மற்றும் உதவிக்கான குழந்தைகள் உரிமை தன்னார்வல அமைப்பு, அசாம் மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்துடன் இணைந்து ஆசிரியர் மீதும், அந்த சர்ச்சைக்குரிய படத்தில் உள்ள மாணவியின் முகத்தை மறைக்காமல் பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்தவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.