ஹரியானாவில் முதல் முறையாக பாஜக ஆட்சி: மகாராஷ்டிராவில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது!
மும்பை: மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா சட்டசபை தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
இதில் மகாராஷ்டிராவில் அது தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஹரியானாவில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. ஹரியானாவில் பாஜக ஆட்சி அமைவது இதுவே முதல் முறையாகும்.
பல ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சி செய்து வந்த மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டசபை தேர்தல்கள் கடந்த 15ம் தேதி நடைபெற்றது. தேர்தலின்போது பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன.
90 இடங்களை கொண்ட ஹரியானாவில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. அங்கு அக்கட்சி 47 இடங்களைப் பிடித்துள்ளது. இதனால் முதல் முறையாக ஹரியானாவில் பாஜக ஆட்சி வருகிறது.
இந்திய லோக்தளம் கட்சி 19 இடங்களுடன் இரண்டாவது இடத்தையும், காங்கிரஸ் 15 இடங்களுடன் 3வது இடத்தையும் பிடித்துள்ளன. தற்போது ஹரியானாவில் காங்கிரஸ்தான் ஆளும் கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் 288 தொகுதிகள் உள்ள மகாராஷ்டிராவில் பாஜக வெற்றி பெற்றாலும் தனிப்பெரும்பான்மை பெறமுடியாமல் போய் விட்டது. பாஜக அங்கு சிவசேனாவுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைக்கலாம் என்று கூறப்படுகிறது.
தேவை ஏற்பட்டால் சிவசேனாவின் ஆதரவை எதிர்பார்ப்பதாக மகாராஷ்டிரா பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். கூட்டணி வைத்தாலும் முதல்வராக பாஜகவைச் சேர்ந்தவர் தான் இருப்பார் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தொகுதி பங்கீடு தொடர்பாக தேர்தலுக்கு முன்பு 25 ஆண்டுகால பாஜக-சிவசேனா கூட்டணி உடைந்தது. ஆனால் தற்போது ஆட்சி அமைக்க அந்த கூட்டணி மீண்டும் அமையும் சூழல் உள்ளது.
மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 288 இடங்களில் பாஜக இதுவரை 109 இடங்களை வென்றுள்ளது. 13 இடங்களில் முன்னணியில் உள்ளது. சிவசேனா 53 இடங்களில் வென்று 8 இடங்களில் முன்னணியில் உள்ளது.
தேசியவாத காங்கிரஸ் 36 இடங்களை வென்று 5 இடங்களில் முன்னணியில் உள்ளது.
காங்கிரஸ் 39 இடங்களை வென்று 4 இடங்களில் முன்னணியில் உள்ளது.
மகாராஷ்டிர நவநிர்மான் சேனா ஒரே ஒரு இடத்தில் மட்டும் வென்று கேவலமாக தோற்றுப் போயுள்ளது.
மற்றவர்களுக்கு 19 இடங்களில் வெற்றி கிடைத்துள்ளது.