டெல்லியில் எந்த தேர்தல் வந்தாலும் தேமுதிக போட்டியிடும்: பிரச்சார கூட்டத்தில் விஜயகாந்த் பேச்சு
டெல்லி: டெல்லியில் எந்த தேர்தல் வந்தாலும் அதில் போட்டியிடுவோம் என்று பிரச்சார கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
டெல்லி சட்டசபை தேர்தல் டிசம்பர் மாதம் 4ம் தேதி நடைபெறுகிறது. இதில் ஆளும் கட்சியான காங்கிரஸ், முக்கய எதிர்கட்சியான பாஜக மற்றும் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் 11 தொகுதிகளில் தேமுதிக போட்டியிடுகிறது.
தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதாவுடன் நேற்று டெல்லி சென்றார். விஜயகாந்தும், பிரமேலதாவும் தனித்தனியாக பிரச்சாரம் செய்தனர். விஜயகாந்த் சென்னையில் இருந்து தான் கொண்டு சென்ற வேனில் பிரச்சாரம் செய்தார்.
அவர் முதல் கட்டமாக மாள்வியாநகர், முனீர்கா, ராமகிருஷ்ணபுரம், மானக்புரா உள்ளிட்ட இடங்களில் வேனில் இருந்தே வாக்கு சேகரித்தார். பிரச்சார கூட்டத்தில் அவர் பேசுகையில்,
தேர்தல் வருகிறது என்பதற்காக நான் யாரிடமும் பணம் கேட்கவில்லை. பிற கட்சிகளை போன்று நான் நிதி திரட்ட இங்கு வரவில்லை. பல கட்சிகள் ஊழல் செய்து கோடிக்கணக்கில் பணம் வைத்திருக்கின்றன. ஆனால் எனக்கு சொந்தமான திருமண மண்டபத்தை இடித்து தள்ளி பல பிரச்சனை செய்தார்கள்.
நீதி கேட்டு உங்கள் முன்பு நிற்கிறேன். இதோடு உங்களை விட்டுவிட்டு போய்விட மாட்டேன். தொடர்ந்து உங்களுக்காக போராடுவேன். டெல்லியில் எந்த தேர்தல் நடந்தாலும் அதில் தேமுதிக போட்டியிடும். நாடாளுமன்ற தேர்தல் உள்பட அனைத்து தேர்தலிலும் நாங்கள் போட்டியிடுவோம்.
சில கட்சிகள் பணம் கொடுத்து கூட்டம் கூட்டுகிறார்கள். யாராவது உங்களுக்கு பணம் கொடுத்தால் வாங்க வேண்டாம். கோவிலுக்கு நன்கொடை என்று கூறி பணம் கொடுக்க முயற்சி செய்வார்கள். அதை வாங்கிவிடாதீர்கள் என்றார்.