மணிப்பூர்-மியான்மர் எல்லையில் தொடர் மழையால் கடும் நிலச்சரிவு.. உயிரோடு புதையுண்டு 21 பேர் பலி
மணிப்பூர்: தொடர் மழையால் மியான்மர் எல்லையை ஒட்டிய பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 21 பேர் உயிரிழந்தனர்.
மணிப்பூரில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர்மழையால் ஏராளமான கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. ஆறுகளிலும் வெள்ள நீர் அபாயகட்டத்தைக் கடந்து பாய்கிறது.
வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளதால் எல்லையோர கிராமங்கள் தண்ணீரில் மிதக்கின்றன. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடயே மணிப்பூர்- மியான்மர் எல்லையையொட்டிய சண்டெல் மாவட்டத்தில் உள்ள சுமோல் கிராமத்தில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த நிலச்சரிவில் சிக்கி 21 பேர் உயிரோடு புதையுண்டு பலியாகினர். மேலும் ஏராளமானோர் மாயமாகி உள்ளதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மத்திய அரசு, பேரிடர் மீட்பு படையினரை மணிப்பூர் அனுப்பியுள்ளது.
மேலும் மணிப்பூர் மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதியளித்துள்ளார்.