மத்திய பிரதேசம்: சொகுசு பஸ் தீப்பிடித்து 35 பயணிகள் உடல் கருகி பலி
போபால்: மத்தியப் பிரதேச மாவட்டம், பன்னா மாவட்டத்தில் சாலையோர பள்ளத்தில் பயணிகள் சொகுசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பேருந்து தீப்பிடித்து எரிந்து 35 பயணிகள் உடல் கருகி உயிரிழந்தனர். பத்துக்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயங்களுடன் உயிருக்குப் போரடி வருகின்றனர்.
தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த சொகுசு பேருந்து மத்தியப் பிரதேசத்தின் சாகத்பூர் நகரில் இருந்து சாட்னா நகருக்கு புறப்பட்டது. அந்த பேருந்தில் சுமார் 55 பயணிகள் இருந்தனர்.
தீ பிடித்து விபத்து
தேசிய நெடுஞ்சாலை 75-ல் மாட்லா காட் என்ற பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் டீசல் டேங்க் தீப்பிடித்து பேருந்து முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்தது.
35 killed and 12 injured after bus catches fire in Chattarpur Panna (Madhya Pradesh). pic.twitter.com/IWXsai26z9
— ANI (@ANI_news) May 4, 2015
35 பேர் கருகி பலி
பேருந்தின் கதவு பூட்டப்பட்டிருந்ததால் சிக்கிக் கொண்ட பயணிகள் அலறி துடித்தனர். தீ மளமளவென பரவியில் 35க்கும் மேற்பட்டோர் தீயில் கருகி உயிரிழந்தனர்.
உடல்கள் மீட்பு
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புப் படை வீரர்கள் தீயை அணைத்து பயணிகளின் உடல்களை மீட்டனர். சிலர் மட்டும் படுகாயங்களுடன் உயிர் பிழைத்துள்ளனர். அவர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விசாரணைக்கு உத்தரவு
இந்த விபத்தில் உயிரிழந்த பயணிகளின் குடும்பங்களுக்கு மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
ரூ. 2லட்சம் நிவாரணம்
பேருந்து உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும் பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் வழங்க முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உத்தரவிட்டுள்ளார்.
மோடி - சோனியா இரங்கல்
பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சித்தலைவி சோனியாகாந்தியும் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.