டீசல் கார் தடையால் ரூ.4,000 கோடி இழப்பு.. அதிருப்தியில் ஆட்டோ மொபைல் நிறுவனங்கள்
டெல்லி: டெல்லியில் டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் கடந்த 8 மாதங்களில் ரூ.4 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் 2 ஆயிரம் சிசி மற்றும் அதற்கு மேல் திறன் கொண்ட டீசல் வாகனங்களுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பரில் தடை விதித்தது. 8 மாதத்திற்கு பின்னர் அந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனால் கடந்த 8 மாதங்களில் ரூ.4 ஆயிரம் கோடியை இழந்துள்ளதாக இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
இந்திய ஆட்டோமொபைல் உதிரிபாக தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 58-வது ஆண்டு கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அதன் தலைவர் வினோத் தாசரி கூறியதாவது: டீசல் வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக தவறான தகவல் கூறப்படுகிறது. நீதிமன்றத்துக்கு அளிக்கப்பட்ட தவறான தகவல்தான், தடை விதிப்புக்கு காரணமாகிவிட்டது.
ஆனால், உண்மையில் அந்த டீசல் வாகனங்கள் அனைத்தும் அரசின் விதிமுறைகளை பூர்த்தி செய்துள்ளது. ஆனாலும் தடை விதிக்கப்பட்டதால் கடந்த 8 மாதங்களில் ரூ.4 ஆயிரம் கோடியை ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இழந்துள்ளன. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட மூலக்காரணம் என்ன என்பதை அறியாமல் எல்லோரும் ஆட்டோமொபைல் துறையை ஒழுங்குபடுத்த விரும்புகின்றனர்.
உண்மையில், 20 சதவீதத்திற்கும் குறைவான அளவே டீசல் வாகனங்களால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு உண்டாகின்றன. டீசல் வாகனங்களுக்கு தடை விதிப்பதைவிட பழைய வாகனங்களுக்கு தடை விதிக்கலாம். அவைதான் அதிக சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்றார்.