பந்த்துக்கு நடுவே பெங்களூரில் கணிசமான ஆட்டோ, டாக்சிகள் இயக்கம்.. திறந்திருந்த ஹோட்டல்கள்
பெங்களூர்: கோவா-கர்நாடகா நடுவேயான கலசா-பண்டூரி நதிநீர் திட்டத்தையும், மேகதாது திட்டத்தையும் செயல்படுத்த வலியுறுத்தி, கன்னட அமைப்புகள் இன்று நடத்தும் கர்நாடகா பந்த்துக்கு மாநிலம் முழுவதும் ஆதரவு கிடைத்துள்ளது. தலைநகர் பெங்களூரில் பெரும்பாலும் பந்த்துக்கு ஆதரவு கிடைத்தாலும், கணிசமான ஆட்டோக்கள் ஓடின. சில ஹோட்டல்கள் திறந்திருந்தன.
கலசா-பண்டூரி நீர்பாசன திட்டத்தை செயல்படுத்த கோவா மாநிலம் எதி்ப்பு தெரிவித்துவருதை கண்டித்து கர்நாடகாவில் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை பந்த் நடைபெறும் என்று கன்னட அமைப்புகள் அறிவித்தன. இந்த பந்த்துக்கு, டாக்சி, ஆட்டோ ஓட்டுநர் சங்கங்கள், பஸ் போக்குவரத்து சங்கங்கள் போன்றவையும் ஆதரவு தெரிவித்திருந்தன.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிற சங்கங்களும் ஆதரவு வழங்கியுள்ளன.
எனவே, காலை முதல் பந்த் வெற்றிகரமாக நடந்துவருகிறது. ஆனால் தலைநகர் பெங்களூருவில் பந்த்துக்கு நடுவேயும், சில ஆட்டோக்கள், கால் டாக்சிகள் இயங்கின. ஆனால் அவை அதிக கட்டணம் வசூலித்தன. நகர மற்றும் வெளியூர் செல்லும் பஸ்கள் இயங்கவில்லை.
பெங்களூரின் சில பகுதிகளில் ஆங்காங்கே ஹோட்டல்கள் திறந்திருந்தன. இதனால் பசித்த மக்கள் சாப்பிட முடிந்தது. சினிமா ஹால்கள் பூட்டப்பட்டன. மால்கள் பூட்டப்பட்டு, கல்வீச்சு அபாயத்தில் இருந்து தப்பும்வகையில், பெரிய வலையால் மறைக்கப்பட்டிருந்தன.