டெல்லி போராட்டத்தைக் கைவிடும் பேச்சுக்கே இடமில்லை… அய்யாக்கண்ணு உறுதி
போராட்டத்தை கைவிடும் பேச்சுக்கே இடமில்லை என்று அய்யாக்கண்ணு உறுதியாகக் கூறியுள்ளார்.
டெல்லி: விவசாயக் கடனை தள்ளுபடி செய்யக் கோரி டெல்லியில் நடத்தப்படும் போராட்டத்தை கைவிடும் பேச்சுக்கே இடமில்லை என்று அய்யாக்கண்ணு உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.
டெல்லி சென்றுள்ள முதல்வர் பழனிச்சாமியை சந்தித்து தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு பேசினார். அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
முதல்வரிடம் ஆறுகள், ஏரிகளை இணைக்கக் கோரிக்கை வைத்துள்ளோம். வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்று கோரியுள்ளோம். அதற்கு முதல்வர் புதிய வழக்குகள் எதுவும் போடமாட்டோம் என்று உறுதியளித்துள்ளார்.
கடன் தள்ளுபடி
விவசாய கடன்களை தள்ளுபடி செய்வது பற்றி முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளோம். கடன்தள்ளுபடி மட்டுமே எங்களின் கோரிக்கையல்ல. நதிகளை இணைக்க வேண்டும் என்பதும் எங்களது முக்கிய கோரிக்கையாகும்.
போராட்டம் தொடரும்
டெல்லியில் நடக்கும் போராட்டத்தை கைவிடும் பேச்சுக்கே இடமில்லை. விவசாய பொருட்களுக்கு லாபகரமான விலை வேண்டும். அது டெல்லியில்தான் முடிவெடுக்கப்படுகிறது. யார் என்ன சொன்னாலும் யாரின் தூண்டுதல் இல்லாமல் விவசாயிகளின் நன்மைக்காகப் போராடுகிறோம்.
கொலை மிரட்டல்
பாஜகவினர் கொலை மிரட்டல் விடுகின்றனர். ஆடி கார் அய்யாக்கண்ணு என்று எச். ராஜா எனக்கு பெயர் வைத்துள்ளார். என்னிடம் ஆடி கார் இருக்கா? நான் 5 ஸ்டார் ஓட்டலில் சாப்பிடுவதாக எச். ராஜா அவதூறு செய்கிறார். நான் அப்படிச் செய்கின்றேனா?
பொய்ப் பிரச்சாரம்
என்னைப் பற்றியும் விவசாயிகளின் போராட்டத்தைப் பற்றியும் தவறான செய்திகளை சமூக வலைதளங்களில் பாஜகவினர் பரப்பி வருகின்றனர். நாங்கள் வலு இல்லாத ஆட்கள். எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாத எச். ராஜா எங்களை மிரட்டுகிறார் என்று அய்யாக்கண்ணு கூறினார்.