டெல்லியில் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த அய்யாக்கண்ணு - கடன் தள்ளுபடிக்கு கோரிக்கை
டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தென்னிந்திய நதிகள் சங்க இணைப்புத்தலைவர் அய்யாக்கண்ணு சந்தித்து பேசினார்.
டெல்லி: குடியரசுத்தலைவர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க டெல்லி சென்றுள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தமிழ்நாடு இல்லத்தில் தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு நேரில் சந்தித்து பேசினார். விவசாய கடன் தள்ளுபடி,நதிகள் இணைப்பு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காண முதல்வரிடம் அய்யாக்கண்ணு வலியுறுத்தியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள், டெல்லியின் ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி தொடங்கி 41 நாட்கள் போராட்டம் நடத்திய விவசாயிகள், முதல்வர் எடப்பாடி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினின் வேண்டுகோளை ஏற்று தங்களது போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.
கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறினர். அதன்படி மீண்டும் தங்களின் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இந்தமுறை விவசாயிகளின் போராட்டம் மிக தீவிரமாக உள்ளது. விவசாயி ஒருவர் தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார்.
இதனிடையே நாட்டின் 14வது குடியரசுத்தலைவராக ராம்நாத் கோவிந்த் இன்று பதவியேற்க உள்ளார். இந்த விழாவில் பங்கேற்க டெல்லி சென்றுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அவர் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கியுள்ளார். அவரை இன்று காலையில் தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு சந்தித்து பேசினார்.
அப்போது அவர், விவசாய கடன் தள்ளுபடி,நதிகள் இணைப்பு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காண முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் வலியுறுத்தியதாக தெரிகிறது.