டெல்லியில் தமிழக விவசாயிகளின் 40 நாட்கள் போராட்டம் முடிவு- மாலை அறிவிப்பு?
டெல்லியில் கடந்த 40 நாட்களாக நடைபெற்று வரும் போராட்டத்தை முடித்துக் கொள்வது குறித்து இன்று மாலை அறிவிக்கப்பசடும் என்று அய்யாகண்ணு தெரிவித்தார்.
டெல்லி: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விவசாயிகளை சந்திக்கவுள்ளதால் எங்களது போராட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து இன்று மாலை முடிவு செய்யப்படும் என்று அய்யாக்கண்ணு தெரிவித்தார்.
வறட்சி நிவாரணத்தை அதிகரித்து வழங்குதல், பயிர்க் கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 14-ஆம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அனைத்து மாநில முதல்வர்கள் கலந்து கொள்ளும் நிதி ஆயோக் கூட்டம் -நாளை நடைபெறவுள்ளது. அதில் கலந்து கொள்ள டெல்லி செல்லும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டத்துக்கு முன்பாக விவசாயிகளை சந்திக்க உள்ளார்.
அப்போது அவர் முன்பு தங்களது 40 நாட்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து போராட்டத்தை முன்னெடுத்து செல்லும் அய்யாக்கண்ணு கூறுகையில், போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து இன்று மாலைக்குள் அறிவிப்பு வெளியாகும்.
வரும் 25-ஆம் தேதி திமுக தலைமையில் அனைத்து கட்சியினர் அறிவித்துள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தில் விவசாயிகள் கலந்து பங்கேற்பர். சென்னையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வரவேற்கிறோம் என்றார்.