சூடுபிடிக்கிறது பாபர் மசூதி இடிப்பு வழக்கு! சாட்டையை சுழற்றும் லக்னோ சிபிஐ கோர்ட்!
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்டோர் ஆஜராக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
லக்னோ: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்டோர் ஆஜராக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. வரும் 30ஆம் தேதி ஆஜாராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பாபர் மசூதி இடிப்பு வழக்கை விரைந்து முடிக்க சுப்ரிம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இதைத்தொடர்ந்து லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரணையை முடுக்கி விட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்திருந்த பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி இடிக்கப்பட்டது. வழக்கு விசாரணை லக்னோ சிபிஐ சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது.
பாஜக தலைவர்கள் மீது குற்றச்சாட்டு
பாபர் மசூதி இடிப்பு வழக்கில், பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, வினய் கட்டியார் உள்பட 6 பேர் மீது, மசூதியை இடிக்க சதி செய்த குற்றச்சாட்டு சேர்க்கப்பட்டு இருந்தது. ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பு சதி குற்றச்சாட்டை ரேபரேலி கோர்ட்டு நீக்கியது.
மீண்டும் விசாரிக்க உத்தரவு
இதை எதிர்த்து சிபிஐ சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அத்வானி உள்ளிட்ட 6 பேர் மீதும் சதி குற்றச்சாட்டை மீண்டும் சேர்த்து வழக்கு நடத்துமாறு கடந்த மாதம் 19ஆம் தேதி தீர்ப்பு அளித்தது.
நாள்தோறும் நடைபெறும் விசரணை
மேலும், ரேபரேலி கோர்ட்டில் நடந்து வந்த விசாரணையை லக்னோவில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டுக்கு மாற்ற உத்தரவிட்டது. அந்த கோர்ட்டில் கடந்த 20ஆம் தேதி முதல் நாள்தோறும தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
30ஆம் தேதி ஆஜராக உத்தரவு
இந்நிலையில் பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கில் பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உட்பட குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் ஆஜாராக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வரும் 30-ம் தேதி ஆஜராக வேண்டும் என்றும் சிபிஐ கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.