குல்பூஷண் ஜாதவை தூக்கிலேற்ற துடித்த பாக்.கிற்கு சர்வதேச நீதிமன்றம் மரண அடி! வழக்கு கடந்து வந்த பாதை
குல்பூஷண் ஜாதவ் மரண தண்டனையை நிறுத்த சர்வதேச நீதிமன்றம் தனது இடைக்கால உத்தரவில் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு கடந்து வந்த பாதையை காணலாம்.
தி ஹேக்: ஓய்வுபெற்ற இந்திய கடற்படை அதிகாரியான குல்பூஷண் ஜாதவ் பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது. இந்த மரண தண்டனையை நிறுத்த சர்வதேச நீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு கடந்து வந்த பாதையைக் காணலாம்.
இந்திய கடற்படையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் குல்பூஷண் ஜாதவ். இவர் பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக கூறி அந்த நாட்டு ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
இந்திய உளவுப்பிரிவு அமைப்பான 'ரா' விற்க குல்பூஷண் ஜாதவ் வேலை பார்த்ததாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியது. மேலும் இந்திய தூதர் கவுதம் பம்பாவாலேவை அழைத்து எதிர்ப்பை பதிவு செய்தது பாகிஸ்தான்.
உளவுத்துறை அதிகாரியாக குல் பூஷன் ஜாதவ் பாகிஸ்தானில் ஊடுருவியது, பலூசிஸ்தான் மற்றும் கராச்சியில் அமைதி சீர்குலைவு நடவடிக்கைகளில் அவருக்கு உள்ள தொடர்பு குறித்து இந்திய தூதரிடம் தங்கள் எதிர்ப்பையும் கவலையையும் தெரிவித்ததாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதற்கு பதிலளித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப், 'பாகிஸ்தான் குறிப்பிடும் தனி நபர் இந்திய கடற்படையில் இருந்து முன்கூட்டியே ஓய்வு பெற்றதில் இருந்து அவருக்கும் அரசுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை' என்றார்.
சர்வதேச நீதிமன்றம்
இந்நிலையில், குல்பூஷண் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை தடை செய்ய கோரி சர்வதேச நீதிமன்றத்தை இந்தியா நாடியது. குல்பூஷண் ஜாதவ் மரண தண்டனையை எதிர்த்து நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா வழக்கு தொடர்ந்தது.
இந்தியா வாதம்
ஜாதவ் மீதான விசாரணை விவரங்களை அளிக்குமாறு 16 முறை பாகிஸ்தானை கேட்டும் அதைத் தர அந்நாடு மறுத்து விட்டதாகவும் இது சர்வதேச விதிகளுக்கு எதிரானது என்றும் இந்திய தரப்பில் வாதிப்பட்டுள்ளது.
வியன்னா ஒப்பந்தம்
வியன்னா ஒப்பந்தம் மற்றும் சர்வதேச சட்டத்தை மீறி பாகிஸ்தான் செயல்பட்டிருப்பதால், ஜாதவை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் இந்தியா தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. ஆனால், வியன்னா ஒப்பந்தப்படி வேவு பார்ப்பவர்கள், பயங்கரவாதிகள் மற்றும் உளவுத்துறையுடன் தொடர்புடையவர்கள் தொடர்பான விவகாரங்களில் சர்வதேச நீதிமன்றம் தலையிட முடியாது என பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நீதிமன்றம்
இதனை பரிசீலித்த சர்வதேச நீதிமன்றம், ஜாதவுக்கு மரண தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. ஜாதவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது தொடர்பான வழக்கில் சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் தரப்பிலான வாதங்கள் முடிவடைந்தன.
நீதிபதிகள் உத்தரவு
11 நீதிபதிகள் கொண்ட சர்வதேச நீதிமன்றத்தில் இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அப்போது குல்பூஷண் ஜாதவ் மரண தண்டனையை நிறுத்த வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் இன்று இடைக்கால உத்தரவிட்டது. இறுதி தீர்ப்பு அளிக்கும் வரை தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தியாவிற்கு உரிமை
குல்பூஷண் ஜாதவை தூதரகம் மூலம் அணுக இந்தியாவுக்கு உரிமை உள்ளது என்றும் சர்வதேச நீதிமன்றம் தெரிவித்தது. ஜாதவ் வழக்கை விசாரிக்க சர்வதேச நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது. ஜாதவை இந்திய தூதரகத்துடன் தொடர்பு கொள்ள பாகிஸ்தான் அனுமதி தராதது தவறு ஆகும்.
வியன்னா சாசனத்தை இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன. இவ்வாறு நீதிமன்றம் தெரிவித்தது.