மனைவி சடலத்தை சுமந்த கணவர்.. பஹ்ரைன் பிரதமரின் துடிப்பு மோடியிடம் இல்லையே?
டெல்லி: ஒடிஷாவில் மனைவியின் சடலத்தை தோளில் சுமந்து சென்ற நபருக்கு பஹ்ரைன் பிரதமர் நிதியுதவி செய்துள்ளார். ஆனால் நம் பிரதமர் மோடி அது குறித்து கண்டுகொள்ளவே இல்லை.
ஒடிஷா மாநிலத்தில் உள்ள காலாஹன்டி அரசு மருத்துவமனையில் காசநோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார் தானா மாஜ்ஹி என்பவரின் மனைவி அமாங் டெய்(42). அவர் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
மருத்துவமனை அமாங்கின் உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்ல வாகன வசதி செய்து தரவில்லை. ஏழையான தானாவால் வாகனத்திற்கு பணம் கொடுக்க முடியவில்லை. இதனால் அவர் தனது மனைவியின் சடலத்தை தனது தோளில் சுமந்து 10 கிலோமீட்டர் நடந்து சென்றார்.
இந்நிலையில் இந்த செய்தி குறித்து அறிந்த பஹ்ரைன் பிரதமர் இளவரசர் கலிபா பின் சல்மான் அல் கலிபா மிகவும் வேதனை அடைந்துள்ளார். தானா மாஜ்ஹிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்த அவர் பஹ்ரைனில் உள்ள இந்திய தூதரகத்திடம் பணம் கொடுத்து அதை வறுமையால் வாடும் தானாவிடம் அளிக்குமாறு தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் வாடும் ஒருவரின் நிலை கண்டு பஹ்ரைன் பிரதமர் வேதனை அடைந்து நிதியுதவி செய்துள்ளார். ஆனால் இங்கே டெல்லியில் இருக்கும் நம் பிரதமர் நரேந்திர மோடி இது குறித்து கண்டுகொள்ளவில்லை. பஹ்ரைன் பிரதமருக்கு தெரிந்த செய்தி மோடிக்கு தெரியாமலா போயிருக்கும்.
சடலத்தை கொண்டு செல்லக் கூட பணம் இல்லாத தானா மூன்று வேளை சாப்பிட்டு வாழ மோடி ஏதாவது வழி செய்தால் நன்றாக இருக்கும். ஆனால் மோடி இதை செய்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.