'சாத்தானின் வேதங்கள்' ராஜீவ் தடை செய்தது தவறு: சிதம்பரம்! இத ஒத்துக்க 27 வருஷம் ஆச்சா?-ருஷ்டி பதிலடி
டெல்லி: உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் சாத்தானின் வேதங்கள் ('Satanic Verses') நாவலை ராஜீவ் அரசு தடை செய்தது தவறு என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளிக்கும் வகையில் இத ஒத்துக்கொள்ள வெறும் 27 வருசம் தான் ஆனதா? என சல்மான் ருஷ்டியின் கேட்டுள்ளார்.
சர்ச்சைக்குரிய எழுத்தாளராக அறியப்படும் சல்மான் ருஷ்டி எழுதிய 'தி சாத்தானிக் வெர்சஸ்' (சாத்தானின் வேதங்கள்) நாவலைக் கடந்த 1988-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் ராஜீவ் தடை செய்தார்.
இந்நிலையில், நேற்று 'டைம்ஸ் இலக்கியத் திருவிழா - 2015' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ப.சிதம்பரம் சாத்தானின் வேதங்கள் நாவலை ராஜீவ் அரசு தடை செய்ததும், இந்திராவால் அவரச நிலைப் பிரகடனம் அமல் படுத்தப்பட்டதும் தவறு என்று கூறினார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக சல்மான் ருஷ்டி தனது டுவிட்டரில் நக்கலாக பதிவிட்டுள்ளார்.
சல்மான் ருஷ்டி டுவிட்டர் பதிவு:
இதை ஒப்புக்கொள்ள வெறும் 27 வருடங்கள்தான் ஆனதா?, இதற்கு முன்பாக செய்யப்பட்ட எத்தனை தவறுகள் திருத்திக் கொள்ளப்பட்டிருக்கின்றன." என்று நக்கலாக கேட்டுள்ளார்.
This admission just took 27 years. How many more before the "mistake" is corrected? https://t.co/qz7t1InXzV
— Salman Rushdie (@SalmanRushdie) November 28, 2015
ஆனால், காலம் கடந்து இப்போது ஏன் இவ்வாறு கூறவேண்டும் என்ற கேள்விக்குப் பதிலளித்த சிதம்பரம், நாவலுக்கு தடை விதிக்கப்பட்ட போதும் தான் இதே கருத்தையே கொண்டிருந்ததாகத் தெரிவித்துள்ளார். அப்போதைய ராஜீவ் தலைமையிலான காங்கிரஸ் அரசில் உள்துறை அமைச்சராக ப. சிதம்பரம் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.