விமானத்தில் ரகளையில் ஈடுபட்டால் வாழ்நாள் முழுவதும் பறக்கத் தடை.. அடுத்த மாதம் முதல் அமல்!
விமானத்தில் ரகளையில் ஈடுபடும் பயணிகளுக்கு வாழ்நாள் முழுவதும் விமானத்தில் பயணம் செய்ய தடை விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
டெல்லி: விமானத்தில் ரகளையில் ஈடுபடும் பயணிகளுக்கு வாழ்நாள் முழுவதும் விமானத்தில் பயணம் செய்ய தடை விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் ரகளை செய்யும் பயணிகளுக்கு அபராதமும் விதிக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டெல்லியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிவசேனா எம்பி ரவீந்திர கெய்க்வாட் ஏர் இந்தியா அதிகாரியை செருப்பால் அடித்த சம்பவம் நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அவருக்கு விமானத்தில் பறக்க அனைத்து விமான நிறுவனங்களும் தடை விதித்தன.
அவர் பகிரங்க மன்னிப்பு கோரியதை அடுத்து தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்த சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விசாகபட்டினத்தில் ஆந்திரா மாநிலத்தின் தெலுங்கு தேச எம்பி திவாகர் ரெட்டி விமான நிலையத்தில் ரகளையில் ஈடுபட்டார்.
ரகளையில் ஈடுபடும் அரசியல்வாதிகள்
அங்குள்ள பொருட்களையும் அடித்து உடைத்து சூறையாடினார். இந்த காட்சிகள் அனைத்தும் அங்குள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவானது.
இதுகுறித்து விசாரணை நடைபெறும் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ அறிவித்தார்.
நடவடிக்கை எடுக்க முடிவு
ஏர் இந்தியா உள்ளிட்ட 7 விமான நிறுவனங்கள் திவாகர் ரெட்டிக்கு தடை விதித்துள்ளன.இந்நிலையில் இது போன்று ரகளையில் ஈடுபடும் பயணிகள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் புதிய விதிமுறைகளை கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பறக்க வாழ்நாள் தடை
அதன்படி விமானம் மற்றும் விமான நிலையத்தில ரகளையில் ஈடுபடும் பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக புதிய விதிமுறைகளை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. ரகளையில் ஈடுபடும் பயணிகளுக்கு அவர்களது குற்றங்களுக்கு ஏற்ற வகையில் 3 மாதம் முதல் வாழ்நாள் வரை விமானத்தில் பறப்பதற்கு தடை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அபராதமும் விதிக்கப்படும்
மேலும் அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என விமான போக்குவரத்துத்துறை செயலாளர் ஆர்என்.சவுபே தெரிவித்துள்ளார். இந்த புதிய விதிமுறைகள் அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அவர் கூறினார்.