உணவு பாதுகாப்புத் துறையில் பதிவு செய்யாமல் கேரளாவுக்கு காய்கறி கொண்டு போக முடியாது
கொச்சி: உணவு பாதுகாப்பு துறையில் பதிவு செய்யாத தமிழக காய்கறி லாரிகள் கேரளாவில் நுழைய தடை விதிக்கப்படுகிறது. இந்த உத்தரவு நாளை முதல் முதல் அமலுக்கு வருகிறது.
தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலத்தில் இருந்து காய்கறிகள், பழங்கள் உட்பட பெரும்பாலான உணவு பொருட்கள் கேரளாவுக்கு செல்கிறது. இந்நிலையில், இந்த பகுதியில் இருந்து செல்லும் காய்கறிகளில் அதிக நச்சுத்தன்மை இருப்பதாக கண்டறியப்பட்டதை தொடர்ந்து தமிழ்நாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து காய்கறிகள், பழங்களை கேரளாவுக்கு கொண்டு செல்லும் வாகனங்கள் உணவு பாதுகாப்பு துறையில் உரிமச் சான்றிதழ் பெற வேண்டும் என கேரள அரசு அறிவித்தது.
இது தொடர்பாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சிவகுமார் கூறுகையில், ‘'ஆகஸ்ட் 4 ஆம் தேதிக்குள் உணவு பாதுகாப்பு துறையில் பதிவு செய்து லைசன்ஸ் வாங்காவிட்டால் தமிழகம் உட்பட பிற மாநிலங்களில் இருந்து வரும் காய்கறி லாரிகள் கேரளாவுக்குள் அனுமதிக்கப்படமாட்டாது'' என தெரிவித்துள்ளார். இதனால் தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் காய்கறி லாரி வாகனங்களுக்கு உணவு பாதுகாப்பு துறையின் மூலம் உரிமச்சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டத்தில் காரமடை ஐடையம்பாளையம் மார்க்கெட், செஞ்சேரிமலை மார்க்கெட், கிணத்துக்கடவு மார்கெட், நாச்சிபாளையம் மார்க்கெட், பொள்ளாச்சி காந்திமார்க்கெட், கோவை எம்ஜிஆர் மார்கெட் பகுதிகளிலிருந்து தினமும் 300 முதல் 400 டன் வரை காய்கறி மற்றும் பழங்கள் கேரளாவிற்கு வாகனங்கள் மூலம் ஏற்றிச் செல்லப்படுகிறது.
இதில் பல வியாபாரிகள் சொந்தமாக வாகனங்களை இயக்கி வருகின்றனர். இதுதவிர பல வியாபாரிகள் ஒன்று சேர்ந்து வாடகைக்கு லாரி உள்ளிட்ட வாகனங்களை காய்கறி ஏற்றி செல்ல பயன்படுத்தி வருகின்றனர். கேரள அரசின் அறிவிப்பை தொடர்ந்து கோவை மாவட்ட காய்கறி வியாபாரிகளிடமிருந்து 150 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.
இது குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறுகையில், கோவை மாவட்டத்தில் காய்கறி ஏற்றிச் செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் உரிமம் வழங்கப்படுவதுடன் அதனை முறையாக பதிவு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஏனெனில் இந்த உரிமச் சான்றிதழ் காய்கறி எங்கிருந்து கொண்டுவரப்படுகிறது என்ற விபரம் கணினியில் பதிவு செய்யப்படும். எனவே, கேரளாவிற்கு காய்கறிகளை கொண்டு செல்லும் வாகன உரிமையாளர்கள் உரிமம் பெற்றுக்கொள்வது அவசியம். தற்போது, வரை கோவை மாவட்டத்தில் 150 பேரிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.
இவர்களுக்கு இன்று உரிமம் வழங்கப்படும். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தில் உரிய ஆவணங்கள், அடையாள அட்டை, இரண்டு புகைப்படங்களை சமர்ப்பித்து ரூபாய் 100 கட்டணமாக செலுத்தி உரிமத்தை பெற்றுக் கொள்ளலாம். இந்த உரிமம் பெறாதவர்களின் வாகனங்கள் நாளை முதல் கேரளாவிற்கு செல்ல அனுமதி மறுக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.
இன்னும் ஏராளமான வியாபாரிகள் உரிமம் கேட்டு விண்ணப்பிக்காமல் உள்ளனர். இன்றே கடைசிநாள் என்பதால், கோவையில் இருந்து கேரளாவுக்கு காய்கறிகளை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என காய்கறி வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.