அதிமுக பொதுக்குழுவிற்கு பெங்களூர் நீதிமன்றம் இடைக்கால தடை.. சென்னை ஹைகோர்ட் அனுமதி!
பெங்களூர்: அதிமுக பொதுக்குழுவை கூட்டுவதற்கு பெங்களூர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. அது செல்லுபடியாகுமா என்ற கேள்வி சென்னை ஹைகோர்ட் தீர்ப்பால் எழுந்துள்ளது.
சென்னையில் நாளை பொதுக்குழுவை கூட்ட எடப்பாடி மற்றும் பன்னீர்செல்வம் அணியினர் முடிவு செய்துள்ளனர். இதை எதிர்த்து தினகரன் தரப்பை சேர்ந்த வெற்றிவேல் எம்எல்ஏ சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை கோர்ட் தள்ளுபடி செய்த நிலையில், உடனடியாக மேல்முறையீடு செய்தார் வெற்றிவேல். அதன் மீது வாத விவாதம் இன்று மாலையே நடைபெற்று தீர்ப்பு இரவு 7.15 மணிக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், அதற்குள்ளாக பெங்களூர் உரிமையியல் நீதிமன்றத்தில் அதிமுக கட்சியின் கர்நாடக மாநில பொறுப்பாளர் புகழேந்தி தொடர்ந்த வழக்கில் இடைக்கால உத்தரவு வெளியாகிவிட்டது.
அதிமுக பொதுக்குழுவை கூட்ட பெங்களூர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. அக்டோபர் 13ம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. போதிய கால அவகாசம் இல்லாமல் பொதுக்குழு கூட்டப்பட்டுள்ளதாக காரணம் காண்பித்து தடை பெறப்பட்டுள்ளது.
அதிமுகவுக்கு கர்நாடகாவிலும் கிளை உள்ளது. எனவே கர்நாடகாவிலுள்ள நீதிமன்றத்திலும் வழக்கு தொடர முடியும் என்கிறார் புகழேந்தி வழக்கறிஞர் சுகுமார்.
இதனிடையே இரவு 9.30 மணிக்கு சென்னை ஹைகோர்ட் தீர்ப்பு வெளியானது. அதில், பொதுக்குழுவை நடத்த தடையில்லை என தீர்ப்பு வழங்கப்பட்டது. எனவே பெங்களூர் நீதிமன்ற இடைக்கால உத்தரவு தங்களை கட்டுப்படுத்தாது என்று முதல்வர் தரப்பு வழக்கறிஞர் திவாகர் தெரிவித்தார்.