'லிங்கா' மற்றும் ரஜினிக்கு எதிராக அவதூறு பரப்ப நீதிமன்றம் தடை!
பெங்களூரு: 'லிங்கா' மற்றும் அதன் நாயகன் ரஜினிகாந்துக்கு எதிராக பிரசாரம் செய்யவும், அதுதொடர்பான செய்திகளை அச்சு, தொலைக்காட்சி ஊடகங்களில் வெளியிடுவதற்கும் இடைக்காலத் தடை விதித்து, பெங்களூரு மாநகர 15-ஆவது கூடுதல் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடித்து அண்மையில் வெளியான 'லிங்கா' படத்துக்கு எதிராகவோ பிரசாரம் செய்வது, கருத்துத் தெரிவிப்பது, போராட்டம் நடத்துவது, அது தொடர்பான செய்திகளை அச்சு, தொலைக்காட்சி, இணையதள ஊடகங்களில் வெளியிடுவது உள்ளிட்ட அனைத்து வகையான நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்கக் கோரி, படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் தாக்க செய்த மனு, மாநகர சிவில், செசன்ஸ் நீதிபதி சர்வோதயா சடிகர் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, ராக்லைன் வெங்கடேஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.சுப்பிரமணியா, லிங்கா படத்துக்கு எதிராகவும், படத்தின் கதாநாயகன் ரஜினிகாந்தின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் சிலரால் திட்டமிட்டபடி பிரசாரம் செய்யப்படுகிறது.
இதுதொடர்பான செய்தியை ஊடகங்களில் வெளியிடுவதால், லிங்கா படக் குழுவினர் குறித்து தவறான கருத்து மக்களிடையே பரவுகிறது. எனவே, லிங்கா படத்துக்கு எதிராக கருத்துத் தெரிவிக்கவும், போராட்டத்தில் ஈடுபடவும், அதுதொடர்பான செய்திகளை ஊடகங்களில் வெளியிடுவதற்கும் இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, லிங்கா படத்திற்கு எதிராக பிரசாரம் செய்யவும், அதுதொடர்பான செய்திகளை அச்சு, தொலைக்காட்சி உள்ளிட்ட அனைத்து ஊடகங்களிலும் வெளியிடுவதற்கும் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.
படத்தின் நாயகன் ரஜினி, தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் ஆகியோருக்கு எதிரான பிரச்சாரத்துக்கும் தடை விதித்தார் நீதிபதி.