பெங்களூரில் ரிடையர்ட் தமிழக என்ஜினியர் வீட்டில் திருடிய 2 பேரை சுட்டுப் பிடித்த போலீஸ்
பெங்களூர்: பெங்களூரில் வசித்து வரும் ஓய்வு பெற்ற தமிழக என்ஜினியரின் வீட்டில் திருடிவிட்டு தப்பியோட முயன்ற 2 திருடர்களை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.
தமிழகத்தில் என்ஜினியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் முரளி மனோகர். அவர் தனது குடும்பத்துடன் பெங்களூர் வித்யாரண்யாபுராவில் இருக்கும் ஹெச்.எம்.டி. லே அவுட்டில் வசித்து வருகிறார். அவர் தொடர் விடுமுறையையொட்டி தனது குடும்பத்தாருடன் தனது சொந்த ஊரான ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூருக்கு சென்றார்.
இந்நிலையில் 2 திருடர்கள் நேற்று அதிகாலை 5 மணிக்கு மனோகரின் வீட்டின் பின்கதவை உடைத்து உள்ளே சென்று திருடிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த போலீஸ்காரர் நாகபூசன் மற்றும் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த ஒருவரும் பூட்டிய வீட்டின் முன்பு நாய் குரைத்துக் கொண்டிருப்பதை பார்த்து அங்கு வந்தனர். பின் வழியாக சென்றபோது வீட்டின் பின்கதவு உடைக்கப்பட்டு உள்ளே ஆட்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் ரோந்து பணியில் இருந்த வித்யாரண்யபுரா சப் இன்ஸ்பெக்டர் பைரப்பாவுக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் கிடைத்த உடன் அவர் சம்பவ இடத்திற்கு வந்தார். வந்தவுடன் இன்ஸ்பெக்டர் புனித்குமாருக்கு அவர் தகவல் கொடுத்தார். புனித்குமார் மேலும் சில காவலர்களை அழைத்துக் கொண்டு அங்கு வந்து திருடர்களை சரண் அடையுமாறு கூறினார். ஆனால் திருடர்கள் இரும்புக் கம்பியால் கண்ணாடிக் கதவை உடைத்து தப்ப முயன்றனர். அப்போது கண்ணாடி உடைந்து நாகபூசனின் தலையில் பட்டு அவருக்கு காயம் ஏற்பட்டது.
இதற்கிடையே தப்ப முயன்ற திருடர்களின் கால்களில் புனித்குமார் துப்பாக்கியால் 3 முறை சுட்டு அவர்களை பிடித்தார். விசாரணையில் அவர்கள் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த மிதுன்(26), அகில்(34) என்பது தெரிய வந்தது.
அவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் திருடர்களிடம் இருந்து 5 கிலோ வெள்ளிப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
முன்னதாக கடந்த 7ம் தேதி விஜயநகர் அருகே உள்ள அக்ரஹாரா தாசரஹள்ளியைச் சேர்ந்த பெண் ஒருவரின் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு ஓட முயன்ற சம்பத்(32) என்ற திருடனை போலீசார் சுட்டுப் பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.