தீபாவளி.. சொந்த ஊருக்கு கிளம்பும் சாப்ட்வேர் இன்ஜினியர்கள்.. பெங்களூரில் கடும் டிராபிக் ஜாம்
பெங்களூர்: தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கையால் பெங்களூர் நகரில் மாலை வேளைகளில் கடும் டிராபிக் நெரிசல் ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவில் இன்று, நாளை, நாளை மறுநாள் என மூன்று நாட்கள் தீபாவளி வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இதையொட்டி பெங்களூர் உள்ளிட்ட அனைத்து முக்கிய நகரங்களும் விழாக்கோலம் பூண்டுள்ளன.
பெங்களூரில் பணியாற்றும் தமிழர்கள், கன்னடர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு கிளம்பிச் செல்ல தொடங்கியுள்ளனர். இன்று இரவே தீபாவளி களைகட்டும் என்பதால் நேற்று மாலை முதல் கூட்டம், கூட்டமாக சொந்த ஊர்களுக்கு கிளம்பியுள்ளனர் பொதுமக்கள்.
இதனால், பெங்களூர் நகரில் மாலை முதல் இரவு வரை கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. மடிவாளா, சாட்டிலைட் பஸ் நிலையம், யஷ்வந்த்பூர் போன்ற புறநகர் பகுதிகளில் பஸ்களை நிறுத்த வசதி செய்யப்பட்டிருந்தாலும், நகருக்குள் இருந்து இந்த புறநகர் பகுதிகளுக்கு பஸ்கள் வந்து சேருவதற்கே குறிப்பிட்ட காலத்தைவிட கூடுதலாக ஒரு மணி நேரமாகிவிடுகிறது. இதன்பிறகு பஸ்கள் கிளம்பி ஒசூர் செல்வதற்கு ஒன்றரை மணி நேரம் ஆகிறது என புலம்புகிறார்கள் பெங்களூரிலிருந்து சொந்த ஊர் திரும்பும் சாப்ட்வேர் இன்ஜினியர்கள்.
ரயில் பயணம் இன்னும் மோசம். ரயில் நிலையத்தை அடையும் முன்பே ரயில்கள் கிளம்பிவிடுகின்றன. காரணம், டிராபிக் ஜாம் என்று அங்கலாய்க்கிறார்கள் பயணிகள். எனவே பயணிகள் விரைந்து கிளம்பி செல்லுமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.