ஸ்மார்ட் போன் ஆர்டர் செய்தவருக்கு செங்கல் அனுப்பிய ஆன்லைன் நிறுவனம்! பெங்களூர் வாலிபர் ஷாக்
பெங்களூர்: தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ஒருவர் ஃபிளிப்கார்ட் மூலம், போன் ஆர்டர் கொடுக்க, அவருக்கு 2 மாம்பழங்கள் அனுப்பி வைக்கப்பட்ட சம்பவத்தின் பரபரப்பு குறையும் முன்பாக பெங்களூரில் போன் ஆர்டர் செய்த ஒருவருக்கு செங்கல்லை அனுப்பி வைத்துள்ளது, பேடிஎம்.காம் (paytm.com) நிறுவனம்.
பெங்களூரின், சி.வி.ராமன் நகரை சேர்ந்தவர் சசிகுமார் (25). பிசினஸ்மேன். இவர் பேடிஎம்.காம் என்ற இணையதளம் வழியாக, சோனி எக்பெரியா அகுவா எம்4 வகை செல்போனை ஆர்டர் செய்துள்ளார். இதன் விலையாக ரூ.23 ஆயிரத்து 644 செலுத்தியுள்ளார். ஜூன் 24ம் தேதி போன் ஆர்டர் செய்த சசிகுமாருக்கு, ஜூலை 3ம் தேதிக்குள் பார்சலை அனுப்பி வைப்பதாக மெயில் மூலம் கூறியுள்ளது மேற்கண்ட நிறுவனம்.
ஆனால், என்ன ஆச்சரியம். மறுநாளே டெலிவரி பாய், வீட்டு கதவை தட்டினார். ஆசையோடு பார்சலை வாங்கிய சசிகுமார், ஆர்வத்தோடு அதை பிரித்தார். பார்சலை பிரித்து பார்த்த சசிகுமாருக்கு, ஷாக். உள்ளேயிருந்தது சோனி போன் இல்லை.. செங்கல். அதுவும் உடைந்துபோன, பயனற்ற செங்கல்.
உடனடியாக ஆன்லைன் ஸ்டோரை தொடர்பு கொண்டார் சசிகுமார். 48 மணி நேரத்தில் பணம் திரும்ப கிடைக்கும் என்று பதில் வந்தது. கடுப்போடு, காத்திருந்தார் சசிகுமார். 5 நாள் ஆகியும் பணம் வந்தபாடில்லை. இந்த லட்சணத்தில், பேடிஎம்.காமில் அவருக்கு இருந்த அக்கவுண்டும் முடக்கப்பட்டது.
இதுகுறித்து, ஊடகங்களுக்கு தகவல் கொடுத்தார் சசிகுமார். பேடிஎம்.காம், மூத்த துணை தலைவர் சங்கர்நாத் இதுகுறித்து கூறுகையில், "கஸ்டமர் தனது பொறுப்பு துறப்பு (disclaimer) ஃபார்மை நிரப்பி, உரிய தகவல்களோடு பேடிஎம்-க்கு அனுப்பினால், பணம் திருப்பி தரப்படும். அதேநேரம், வாடிக்கையாளர் கணக்கு சஸ்பென்டில் வைக்கப்படுவது சகஜமானதுதான். இந்த விவகாரத்தில் யாரையும் குற்றம்சாட்ட விரும்பவில்லை. சில நேரங்களில் இப்படி நடப்பதை தவிர்க்க முடிவதில்லை" என்றார்.