பெங்களூரு 'நம்ம மெட்ரோ'விலும் இந்தி..கன்னடர்கள் மத்தியில் கொந்தளிப்பு!
கர்நாடகாவில் சேவையைத் தொடங்கியுள்ள நம்ம மெட்ரோ ரயிலில் இந்தியில் எழுதியுள்ளதற்கு கன்னடர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பெங்களூரு : நம்ம மெட்ரோ ரயிலில் சைன் போர்டுகளில் கன்னடம், ஆங்கிலத்தோடு இந்தியிலும் எழுதப்பட்டிருக்கும் அறிவிப்புகள் மக்களிடையே எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரில் போக்குவரத்து நெரிசலை போக்கும் விதமாக கடந்த வாரம் மெட்ரோ ரயில் சேவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியால் தொடங்கி வைக்கப்பட்டது. பெங்களூர் அரசு, இந்திய அரசு நிதியுதவியுடன் தொடங்கப்பட்டுள்ள மெட்ரோ ரயில் சேவைக்கு நம்ம மெட்ரோ என்று பெயரிடப்பட்டுள்ளது.
அலுவலகம், கல்லூரி செல்வோரிடையே பெரும் வரவேற்பை பெற்ற நம்ம மெட்ரோ ரயிலில் இந்தியில் எழுதப்பட்டிருப்பது தான் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. பொதுவாக மக்கள் அதிகம் பயன்படுத்தும் பேருந்து, ரயில் நிலையம் உள்ளிட்டவற்றில் அந்த மாநில மொழியோடு, ஆங்கிலத்தில் அறிவிப்புகள் இடம் பெறும்.
இந்தி திணப்பு
ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் இந்தி அனைத்திலும் புகுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வடமாநிலங்கள் பக்கம் ஆங்கிலம் முதல் மொழியாகவும், இந்தி இரண்டாவது மொழியாகவும் பார்க்கப்படுவதாக மக்கள் கொந்தளிக்கின்றனர்.
பின்னுக்கு தள்ளப்படுகிறது
அப்படி இருக்கும் போது மாநிலங்களில் இந்தியை புகுத்துவன் மூலம் மாநில மொழியை 3வது மொழியாக மத்திய அரசு சித்தரிப்பதாக கன்னடர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் இதே போன்று கன்னடத்தில் எழுத அனுமதிப்பார்களா என்று கொந்தளிக்கத் தொடங்கியுள்ளனர்.
வெடிக்கப் போகும் போராட்டம்
கன்னட மொழியை பாதுகாக்கும் குழுவான பவனாசி பலகா பிரகாசனா சமக வலைதளத்தில் மத்திய அரசின் இந்தி திணிப்பிற்கு எதிராக குரல் கொடுத்து வருகிறது. இந்நிலையில் ஆங்கிலத்துக்குப் பதிலான இந்தியில் எழுதிய மெட்ரோ நிர்வாகத்திற்கு எதிராக விரைவில் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என்று கன்னட சங்கங்கள் அறிவித்துள்ளன.
மைல்கற்களில் இந்தி
நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளில் உள்ள மைல்கற்களில் ஆங்கில எழுத்துகளை அழித்துவிட்டு இந்தியில் எழுதம் பிரச்னைக்கு திமுக கண்டனம் தெரிவித்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது நம்ம மெட்ரோவில் இந்தியில் எழுதப்பட்டிருப்பதற்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கட்டாயமாக்கக் கூடாது
இந்தி மொழியை ஒவ்வொரு விஷயத்திலும் திட்டமிட்டே சேர்ச்து வரும் பாஜக, நேற்று தான் பாஸ்போர்ட்டுகளில் கட்டாயமாக்கியது. இந்தியை மொழியாக கற்பதில் எந்த பிரச்னையும் இல்லை என்று கூறுகின்றன மாநிலங்கள். ஆனால் பாஜகவின் இந்துத்துவா கொள்கைளை திணிக்கும் விதமாக இந்தியை கட்டாயப்படுத்துவதை ஏற்க முடியாது என்பதே போராட்டத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.